பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

69

அருள்நெறி முழக்கம்


தமிழ்நாட்டின் இலக்கியத்திற்குத் திருவள்ளுவர் குறள் ஒன்றே போதும். அதற்கு ஒப்பத் திருவாசகம் உண்டு. இதனை எரியில் இடவேண்டும் என்று சொல்கின்றார்கள். ஏன் என்று நமக்குப் புரியவில்லை. முன்னெல்லாம் ஏதோ புராணங்களைக் கொளுத்த வேண்டுமென்று பேசிக் கொண்டு வந்தனர்.

புராணங்களில் மெய்யானவையும் உண்டு. பொய்யானவையும் உண்டு. சாதாரணமாகக் குழந்தைகட்கு ஏதேனும் கற்பனை மூலந்தான் அறிவு புகட்டல் இயலும், அப்படிப் புகட்டுதலே பயன்தரும். அப்படிப் பொய்யான இலக்கியங்கள் பல இருக்கலாம். நாட்டு மக்களுக்கு நல்லன சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அங்ஙனம் செய்திருக்கலாம்.

இன்று மக்கள் அறிவு வளர்ந்து விட்டது என்று சொல்கின்றனர்.அறிவு வளர்ச்சி பெறாத காலத்தில் கற்பனை மூலம் - கட்டுக் கதைகளின் மூலம் பலவற்றைச் சொல்லியிருக்கலாம். ஆனால் “மனிதனை மனிதனாக வாழ வைக்கின்ற” உள்ளத்திலிருந்து எழுந்த நல்ல அன்பு பொருந்திய அறந்தழுவிய வாழ்க்கையிலிருந்து வந்த மொழியை எரியில் இட வேண்டும் என்று சொன்னால் “விலங்கொடு அனையர் மக்கள்” என்று வள்ளுவர் சொல்லுகின்ற சொல்லைத்தான் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அறத்திற்கு மாறுபட்டன வருகின்றபொழுது வள்ளுவனார் தம்மையும் அறியாது தமிழ்நாட்டு இரத்தம் ஒடுவதால் கோபமாகப் பேசுகின்றார்.

அந்தக் கோபம் அல்லவர் தம்மையும் நல்லவர் ஆக்குதற்காகவே. எரியில் இட வேண்டும் என்று சொல்லுகின்றவர்களைப் பார்த்து எச்சரிக்கின்றார். இவ்வாறெல்லாம் சொன்னால் பேய்த்தன்மையைப் பெறுகின்றாய் என்று சொல்லுகின்றார். சமயத்தைப் பரப்புவதற்கென்றே பாடுபட்ட மாணிக்கவாசகர் கூட இப்படிப்பட்டவர்களை, "ஆப்தமானார்” என்று பரிவுடன் பேசுகின்றார். ஆனால் திருவள்ளுவரோ, பேய்க்கூட்டம் என்று சொல்லுகின்றார்.