பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

81

அருள்நெறி முழக்கம்


இன்றைய நிலை

இன்று தமிழன்பும், தமிழார்வமும் மக்களிடையே அரும்பி மலர்ந்திருக்கிறது. ஆனால், பழந்தமிழ்க் கொள்கைக்கு முரண்பட்ட நிலையில் ஒரு சாரார் தமிழை வளர்க்க, தமிழர் நிலையை உயர்த்தப்பாடுபடுகின்றனர். தமிழ்வேறு, சமய நெறிவேறு என்று கருதுகின்றனர். வாழ்க்கை வேறு, சமயநெறிவேறு என்று கருதுகின்றனர். தமிழருக்கே உரிய சமய நெறியினைப் பிறருடையது என்று தவறாகக் கருதுகின்றனர். தமிழினத்தின் குருதியிலே கலந்து படிந்திருக்கின்ற சமயப் பண்பினை வேண்டாதன என்று கருதுகின்றனர். சமுதாயத்தின் பொது நிலையங்களாக, உணர்வூட்டும் நிலையங்களாக, கலைவளர்சுடங்களாகக் காட்சியளிக்கும் திருக்கோயில்களைப் புறக்கணிக்கின்றனர். புலவர் பெருமக்களது இலக்கியங்களையெல்லாம், தமது அறிவின் திறத்திலேயே நின்று, ஒவ்வாமை கண்டு இழித்துப் பேசுகின்றனர். திருவள்ளுவரது திருக்குறளிலும் கூட முழுதும் கொள்ளத்தக்கது இல்லை, அதிலும் வேண்டாதன உண்டு என்று சொல்லுகின்ற அளவுக்கு ஒரு சில தமிழர்கள் வந்துவிட்டதை என்னென்று கூறுவது? இதுவா தமிழன் நிலை? இந்த நிலை வளருமானால் தமிழ் வளருமா? தமிழினம் தலைநிமிர்ந்து வாழ முடியுமா? “நல்ல புத்தகத்தை அழித்தல் கொடுமையிலும் கொடுமை" என்று மகாகவி மில்டன் கூறுகின்றான். எனவே, பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பாங்குறப் படித்து, வாழ்க்கையில் அமைத்துக் கொள்ள வேண்டியது தமிழரின் கடமை; தலையாய கடமை.

{[larger|நமது கடமை}}

தமிழ்நாடு தனிநாடாக ஆகும் காலம் விரைவில் வருகிறது. தமிழர் தனித்த நாடு பெறுவதோடு அமைதி கொள்வது கூடாது. தனி வாழ்வு, பொதுவாழ்வு இரண்டிலும் தமிழ்மொழி சிறந்த இடம் பெறச் செய்ய வேண்டும். தமிழர்களது வீட்டிலே, மன்றங்களிலே, அரசியலிலே ஆலயங்களிலே எங்கும் தமிழ் முழக்கம் கேட்கப் பெற வேண்டும்.