பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முத்தி நெறி

113

நிலை உண்டாகின்றது. ஞானயோகத்தினால் தன் ஆன்மா இன்னது என்று தனக்குப் புலனாவதுபோல எல்லாச் சீவர்களிடமும் ஆன்மா என்று ஒன்று இருப்பது தட்டுப்படுகின்றது.

இதற்கு அடுத்த உயர்நிலையில் எல்லா உயிர்களிடையே ஊடுருவி நிற்கும் பரமான்மாவின் சாயல் தோன்றுகின்றது. இது திடீரென்று தோன்றி மறையும் நிலையாகும். இதற்கு அடுத்த நிலையே பக்தி யோகம் என்பது: இந்த நிலையில் முமுட்சுகள் தம் முனைப்பை அகற்றி இறைவனுடைய சங்கற்பத்துக்கு அடிபணிந்து இறைவனுடன் நிரந்தரத் தொடர்பு கொள்வதற்குத் தயாராகிக் கொள்கின்றனர். இந்நிலையில் தமக்கும் இறைவனுக்கும் அறுபடாத தைலதாரை போன்ற தொடர்பு ஏற்படுகின்றது. நாளாக நாளாக இந்நிலையில் ஒரு புதிய ஆற்றல் தோன்றுகின்றது. வானநூல் அறிஞர் பூமியின் சிறுமையையும் அதனைக் கவர்ந்து நிற்கும் கதிரவனின் பெருமையையும் உணர்வதுபோல், பக்தர்களும் சமுசாரத்தில் உழலும் தம் ஆன்மாவின் சிறுமையையும், எல்லாவுயிர்களையும் புரக்கும் இறைவனின் பேராற்றலையும் உணர்கின்றனர். இந்நிலையில் சீவான்மா பரமான்மாவுடன் கலக்கின்றது; கடலில் கிடக்கும் கடற்பஞ்சு போன்ற நிலையினை அடைகின்றது. இந்த நிலையையும் பரபக்தி, பரஞானம், பரமபக்தி என்று வேறுபடுத்திக் காட்டும் மரபும் உண்டு. இந்நிலைகளையெல்லாம் ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆங்காங்குக் காணலாம். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார் பெருமக்கள் இந்த மூன்று நிலை கட்கும் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர்.

பிரபத்தி நெறி : மேற்கூறிய பக்தி நெறியை அநுட்டிப்பது எல்லோராலும் முடியாது. ஆகவே, உயர்ந்தோர்,