பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தன்னிகரற்ற இன்னிசைக் கவிஞர்


"பாட்டினைப் போல் ஆச்சரியம்
பாரின் மிசை இல்லையடா"

- என்று புத்துலகக் கவி பாரதியார் அன்று பாட்டின் பெருமையை வியந்து, பாராட்டிப் பாடினார். இன்று அந்த வரிகளுக்கு விளக்கமாக தமிழ்த் திரையுலகில் முடிசூடாப் பெருங்கவியாக விளங்கி வருகின்ற மதிப்புமிகு அண்ணன் மருதகாசி அவர்களின் பாடல்கள் விளங்குகின்றன. ஒரு காலத்தில் தமிழ்த் திரைப் பாடல்கள் இலக்கியமாக முடியுமா? என்ற வினா எழுந்ததுண்டு. அதற்கு, முடியும் என்று தங்களுடைய ஆற்றலால், அரிய படைப்புகளால் விடையளித்த கவிஞர்களில் குறிப்பிடத் தகுந்தவர், பெருங்கவிஞர் மருதகாசி அவர்கள் என்றால் மிகை இல்லை. அதற்குச் சான்றாக அவரின் இந்தத் திரைப்படப்பாடல் தொகுப்பு விளங்குகிறது. நான் சின்னஞ் சிறுவனாக உலவிய போது, செந்தமிழை உண்டு களிக்கக் கள்வெறி கொண்டு திரிந்தபோது, பாடி மகிழ்ந்த பாடல்களிலே அண்ணன் மருதகாசி அவர்களின் பாடல்கள் முன்னிடம் பெற்று இருந்தன.

"வாராய் நீ வாராய்!
போகுமிடம் வெகுதூரமில்லை நீவாராய்"
"மனுஷனை மனுஷன் சாப்பிடுறான்டா
தம்பிப்பயலே!-இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக்கவலே!"
"உலவுந் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே!"