பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

எளிமை, இனிமை, அதே நேரத்தில் சூழ்நிலைக்கேற்ப அமையும் திரைப்படப் பாடலாக இருந்தாலும், அதனுள் சமூகப்பார்வை பிணைத்து வெற்றி காணும் திறமை அவருக்கே உரிய தனித் திறமையாகும்.

"அழகை ரசிப்பதில் கவிஞன் நான்!
அன்பு காட்டினால் அடிமை நான்!
பழகும் தன்மையில் பண்புள்ள தமிழன்
பரந்த நோக்கம் உள்ளவன் நான்!"

என்ற அவரின் பாடல் வரிகளுக்கு இலக்கணமாகவே இன்றும் அவர் வாழ்ந்து வருகின்றார்.

எந்தவிதப் பின்னணிகளும் இல்லாமல் எந்தவிதப் பெரிய மனிதர்கள் அரவணைப்பும் இல்லாமல், தன் திறமை ஒன்றினாலேயே வெற்றி கண்டு, பல்லாயிரம் விழுதுகளுடன் படர்ந்து நிற்கின்ற ஒரு ஆலமரமாய் நிமிர்ந்து நிற்கின்ற பெருங்கவிஞர் மருதகாசி அவர்கள் இன்றைய கவிதை உலகில் குறிப்பாக தமிழ்த் திரைப்பட உலகில் தலையாய வழிகாட்டி என்றால் மிகை இல்லை. தன்னிகரில்லா இந்த இன்னிசைப் பெருங்கவிஞரின் உழைப்பால், ஆற்றலால் தமிழன்னை, பெரிதும் புன்னகைத்துப் பூரிப்படைந்துள்ளாள்! வழி காட்டுதற்குரிய இக்கவிஞரின் வழிநடந்து வாழ்வோம். இப்பெருமகனை வணங்கி வாழ்த்துவோம்.

வெல்க பெருங்கவிஞர் மருதகாசி கொள்கைகள்!

அன்பன்.
பொன்னடியான்
"முல்லைச்சரம்"
43, துரைசாமி சாலை,
வடபழனி, சென்னை-26