பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20


என்னைப் பார்த்த பாலு முதலியார் அவர்கள், "ஏனப்பா! நீ கூப்பிட்டால் கூட, சேலம் வருவதில்லை?" எனக் கேட்டார். நான் "நேரம் போதவில்லை. அதனால் வரவில்லை" எனச் சொல்லி விட்டேன். உண்மையான காரணம் வேறு. T.R.சுந்தரம் அவர்கள் இல்லாத சமயத்தில், என்னிடம் பண விஷயத்தில் சொன்னபடி நடக்கவில்லை என்பதுதான் காரணம்.

அவர்கள், அய்யா அவர்களை, "அலிபாபா" படத்திற்குப் பாட்டு எழுத 25 ஆயிரம் ரூபாய் என முடிவு செய்து விட்டு, "அய்யா! நீங்கள் எழுதி, டியூன் போட வேண்டிய பாடல்கள் இரண்டு அல்லது மூன்றுதான் இருக்கும். மீதமுள்ள பாடல், இந்தி அலிபாபாவில் உள்ள டியூனுக்கே எழுத வேண்டும்" என்று சொன்னதும், அய்யா என்னிடம், "நீ சேலம் வருகிறாயா?" எனக் கேட்டார்கள். அதன் காரணத்தை யூகித்துக் கொண்ட சுலைமான் அவர்கள் மாலை திரும்பி வருவதாகச் சொல்லி விட்டு T.R.S.க்கு டிரங்கால் செய்து, "அய்யாவை நீங்கள் கேட்டபடி ஏற்பாடு செய்து விட்டோம். ஆனால் ரிக்கார்டு டியூனுக்குப் பாட்டு எழுதுவது என்றால், மருதகாசியும் என்னுடன் வருவார் என்று சொல்லி இருக்கிறார்" எனக் கூற, அதற்கு T.R.S.அவர்கள் சுலைமான் அவர்களிடம், "நான் பலமுறை கேட்டும், மருதகாசி வர மறுத்து விட்டதாகச் சொன்னாயே? இப்பொழுது மட்டும் எப்படி வருகிறார்? அவர் மிகவும் மரியாதையுள்ளவர். இதற்கிடையில் ஏதோ காரணம் இருக்கிறது. அதனால் அருணா பிலிம்ஸ் கிருஷ்ணசாமியைப் பார்த்து, மருதகாசியை மாலை ஆறு மணிக்கு மேல் டிரங்கால் செய்து, நான் பேசச் சொன்னதாகச் சொல்" எனக் கூறி விட்டார். திரு. சுலைமான் அவர்கள், அதை அருணா பிலிம்ஸ்க்கு ஃபோன் செய்து சொன்னார்.

நான் டிரங்கால் செய்து, T.R.S. அவர்களிடம் பேசினேன். "காலையில் கவிராயரை அழைத்துக் கொண்டு வர முடியுமா?" என T R.S. கேட்டார்.