பக்கம்:ஆண் சிங்கம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆண் சிங்கம்



தினசரி இதே எழவாகி விட்டால், வீட்டிலே இருக்கிறவ பிணமாகத்தான் மாறுவாள்!” உக்கிரமான பேச்சு பாய்ந்து புரள, மடார் என்று கதவு திறக்கப்பட்டது.

‘ஆண் பிள்ளைச் சிங்கம்’ இஹிஹி என்று இளித்ததே தவிர, தனது டிரேட் மார்க் உறுமலைச் சிதறவில்லை!

‘வீட்டிலே ஒருத்தி காத்துக் கிடப்பாளே, அவளும் மனுஷிதானே என்ற எண்ணம் உங்களுக்கு என்றைக்காவது ஏற்பட்டிருக்குதா? தினம் ராக்காடு வெட்டி மாதிரி, நடுச்சாமத்திலே வந்து தெருக்காரங்க தூக்கம் கெடும்படியா கதவைப் போட்டு உடைக்கிறது! வேளா வேளைக்கு வீடு திரும்ப முடியாமல் அப்படி வெட்டி முறிக்கிற வேலை என்னதான் இருக்குதோ?...’

தங்கத்தின் உள்ளம் கொல்லுலையில் கொதிக்கின்ற இரும்பு போலும்! சந்தர்ப்பம் அதன்மீது சிதறும் தண்ணீர் போலும்! அதனால் தான் சுர்சுர்ரெனச் சுடுசொற்கள் சுரீரிட்டன போலும் !

சிங்காரம் பிள்ளை கோபம் கொள்ள வில்லை. எரிந்து விழவில்லை. ஏசவில்லை. ஊருக்கெல்லாம் ‘சண்டியர்’ ஆன அவர் வீட்டுக்குள் அசட்டுச் சிறு பையன் மாதிரி அவள் வாயையே பார்த்துக் கொண்டு நின்றார்,

இவ்வளவுக்கும், அவர் எதிரே நின்று இடியாய் உறுமிக் கொண்டிருந்த தங்கம் ஒரு தங்கச் சிலையும் அல்ல. கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகின்ற கிளியுமல்ல. அழகில் மயிலும் இல்லை. நடமாடும் எலும்புக் கூடாக – எலும்புருக்கி நோயால் வாடுகிற ‘ஸ்கெலிடன்’ ஆகக் காட்சி தந்தாள். அவள் பேச்சிலோ அகங்காரமும், அவரை அலட்சியமாக எடுத்தெறிந்து பேசும் மனோபாவமும் ஒலி செய்தன.

‘நீயும் ஒரு மனுஷனாட்டம் உலாவிக்கிட்டு இருக்கியே ஊரிலே!’ என்று சீறினாள் அவள்.

115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/117&oldid=1072248" இலிருந்து மீள்விக்கப்பட்டது