பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பார்ப்பானையே குறைகூறிப் பயனில்லை!

ரிய இனம் வேறு சில இனங்களைப் போலவே உலகெங்கணும் பரந்து கிடக்கின்றது. ஆனால் அஃது இவ்விந்திய நிலத்தொகுதியுள் - குறிப்பாகத் தென்னாட்டுத் திரவிடரிடை - தமிழரிடை மிகுந்த அளவில் ஊடுருவி இரண்டறக் கலந்துள்ளது போல் வேறெந்த இனத்தொடும் அவ்வாறு கலப்புக் கொண்டதில்லை. அதற்கு வரலாற்று நிலையில் பல கரணியங்களைச் சொல்லலாம். அவற்றுள் ஒன்று, பிற நாட்டு மக்கள் ஆரியரைப் போல் வெள்ளை மேனியராகவே இருக்க, தென்னாட்டவர் மட்டும் - தமிழர்மட்டும் கறுத்த மேனியராய் இருந்தமையால், அவர்கள்பால் தங்களை நிலத்தேவர் என்று கூறி ஏமாற்றுவதற்கும், அவர்கள் வளங்களை கொள்ளையடித்து வயிறு வளர்ப்பதற்கும் இவர்களுக்கு எளிதாகவிருந்தது. அத்துடன் தமிழர்கள் பொதுநிலைப் பண்பினராயும் தீவினைக்கஞ்சும் தெய்வ நம்பிக்கை யுடையவராகவும், வந்தவரை விருந்தோம்பும் அறவுணர்வினராயும், பகைவர்க்கும் உதவும் அன்புணர்வுடையவராகவும் விளங்கி வந்தமை, அவர்கள் தங்கள் இருப்பிடத்தைத் தென்னாட்டிலேயே பெரிதும் நிலைப்படுத்திக் கொள்ள வாய்ப்பாக விருந்தது. ஆனால் இது மூவாயிரமாண்டுகளுக்கு முந்திய கதை. அவ்வளவு பழங்கதை எனினும், அன்று தொடங்கிய தமிழரின் வரலாற்றுச் சிதைவுக்கு இன்றும் அது கரணியமாக விளங்குவதால், மேலும் மேலும் அதையே திரும்பத் திரும்ப நினைவுகூர வேண்டியிருக்கின்றது.