பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

129


கல்லூரியில் இடந்தர உருபா பத்தாயிரத்தை பாவேந்தர் மகளிடமே கேட்ட நிகழ்ச்சியை நான் நன்கு அறிவேன். நம்மவர்கள் பதவியும் அதிகாரமும் வந்தவுடன் நடந்துகொள்ளும் தகவின்மை யிருக்கின்றதே. அது, பதவியும் அதிகாரமும் பெற்ற பார்ப்பான் ஒருவன் நடந்துகொள்ளும் தகவாண்மையைவிட நூறுமடங்கு தாழ்ந்ததாக விருக்கின்றது. பார்ப்பனர்களையும் அவர்தம் அன்றைய இன்றைய செயற்பாடுகளையும் தென்மொழி கண்டித்த அளவு வேறெந்த இதழும் கண்டித்ததில்லை. ஆனால் அதற்குப் பார்ப்பனர்களால் வந்த கேடுகளைவிடத் தமிழர்களால் வந்த கேடுகளே மிகுதி. எஃது எப்படியோ, புகழ்ச்சி நமக்குச் சுவையாக இருக்கின்றது. அது மனத்தில் இனிக்கின்றது. ஆனால் நம்மைப் பற்றிய இகழ்ச்சியுரைகள் நம் செவிகளிலும் கைப்பதில்லை.

இத்துறையில் நாம் இன்னும் சொல்ல வேண்டுவனவும் விண்டு விளக்க வேண்டுவனவும் நிறையவுள. இவற்றை வேறு வழியின்றி வெளிப்படையாகவே கூறவேண்டியிருப்பதால், ஒரு சோற்றுப் பதமாகவே சிலவற்றைக் கூற வேண்டி வந்தது, ஆனால் தமிழர்கள் இவ்வளவிலேயே தங்கள் குறைபாடுகளை இன்னின்ன என்று இனங்கண்டு கொண்டு, தாம் ஆண்டாண்டுக் காலமாய் வீழ்ந்து கிடக்கும் அத்துணை இடர்ப்பாடுகளுக்கும், ஆரியப் பார்ப்பன இனமே நூற்றுக்கு நூறு கரணியம் என்று வீணே எண்ணி இறுமாந்து திரியாமல் தம் அறியாமையும், மடித்துயிலும், தந்நலமும், நடுநிலையற்ற போக்கும் பிறவுமே நம் வீழ்ச்சிக்குப் பெருங்கரணியங்கள் என்று கண்டு, நம்மை முன்னேற்றிக்கொண்டு போவதில் அக்கறை காட்ட வேண்டும் என்று தலைவணங்கி ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கின்றேன்.

– தென்மொழி, சுவடி : 9, ஓலை : 8, 1971