பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

135


இந்த, இந்து மதப் பித்தர்கள் செய்யும் விளம்பரப் பித்தலாட்டங்களைப் பார்த்துவிட்டு தந்தம் மதப்பித்தர்கள் எங்குத் தங்களைக் கைவிட்டுவிடுவார்களோ என்று அஞ்சிய கிறித்தவ, இசுலாமிய மதத்தலைவர்களும் தங்கள் தங்கள் கோயில்களிலும் இந்தப் புதிய பாணிகளைப் பின்பற்றி ஒலிபெருக்கி வழியாகவே தங்கள் தங்கள் மதஉரிமை(!)களைப் பரப்பிவரத் தொடங்கிவிட்டனர். இரம்சான் போலும் திருவிழாக் காலங்களில் தங்கள் மதக்காரர்களை (அஃதாவது ஒரு தெருவிலுள்ள ஓரிரண்டு வீட்டுக்காரர்களை) எழுப்புவது போல் இரவு இரண்டு மணிக்கே வந்து, அந்தத் தெருவில் உள்ள அத்தனை வீட்டுக்காரர்களும் திடுக்கிட்டு எழும்படி சலங்கையொலி யெழுப்பும் தமுக்கொலியை அடித்தபடி காட்டுக் கத்தல்கள் கத்திவருவது எப்படி நாகரிகமான மதக்கோட்பாடோ தெரியவில்லை. விருப்பமில்லாத – அல்லது வேண்டாத – பலருடைய – அல்லது சிலருடைய – அல்லது ஒருவனுடைய காதுகளில் – அவர்கள் அல்லது அவன் – விரும்பாத நேரத்தில் – ஒலிபெருக்கி வழியாகவோ வேறு தப்பறைகளின் வழியாகவோ ஒலிகளைப் புகுத்தி அமைதியைக் கெடுப்பது எப்படி நாகரிகமாகும்? மதம் என்னும் அளவில் மட்டும் எப்படி நாகரிகமற்ற ஒரு செயல் நாகரிகமாகக் கருதப்பட்டுவிடும்? இதை எப்படி அரசு விட்டுக் கொண்டிருக்கலாம். பெரும்பாலும் பொதுக்கூட்டங்களைத் தவிர வேறு எதற்காக ஒலிபெருக்கிகள் வைக்கப்படல் வேண்டும்? விலங்குத்தனமான வேண்டாத காட்டுக் கூச்சல்கள் மக்களின் அமைதியை எத்தகைய அளவில் கெடுத்து வாழ்வை வெறுப்புடையதாக ஆக்கி விடுகின்றன!

மற்றும் விளக்கணி விழா(தீபாவளி)ப் போலும் விழா நாட்களில் கேட்கவே வேண்டியதில்லை. பார்ப்பன வாண்டுகள், அல்லது ‘இப்பி’ப் பார்ப்பன விடலைகள் ஒரு சிலர் முதல் நம்(!) சட்டமன்ற உறுப்பினர்களின் குழந்தைகள், நம் (!) மாண்புமிகு அமைச்சர்களின் செல்வத் திரு மகன்கள்வரை எல்லாரும் வேண்டுமென்றே கொளுத்தும் ‘பட்டாசு’ வெடிகளால் பொதுவிடங்களில் அமைதியைக் கெடுத்து நகரத்தையும் தெருக்களையும் குட்டிச்சுவராக்கிக் குப்பை கூளங்களைப் போடத்தான் வேண்டுமோ? எந்த 'நரகாசுரன்' செத்துப்போன இழவிற்காக நாம் இப்படி ஆண்டுதோறும் பட்டாசு வெடிகளின் பட்டாளக்களத்தில் அஞ்சி அஞ்சி நடப்பது? அந்த ’நரகாசுரன்’ எத்தனையாவது ‘நரகாசுரன்’? எந்த ஆண்டில் அவன் இறந்தான்? என்பதை எந்த வரலாற்று நீலகண்ட சாத்திரியாவது ஆராய்ந்து அரசுக்குச் சொல்லியுள்ளாரா? பின், ஏன் அவனுக்காக இந்த அணுக்குண்டுக் காலத்தில் நாம் நம் மூட நம்பிக்கைக்குப் புதுப்புதுப்