பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

137


நம்(!) அண்ணா விழாவை நாம் செய்யவும் அவர்கள் விட்டுக்கொடுப்பார்கள் என்ற எண்ணமோ, ஏதோ? சென்ற மாதம் நடந்த நம்(!) முப்பெரு விழாவின்பொழுது கூட நம்(!) அண்ணாச்சாமி(1)க்குப் பலவிடங்களில் கற்பூரம், பூசனைகள் செய்யப்பட்டன!!! நல்ல பகுத்தறிவு.! கூடிய விரைவில் பெரியார் கோயில்கள், அண்ணா கோயில்கள் சென்னையிலேயே கட்டப்பட்டாலும், அவற்றிலாகிலும் நாம்(!) கொண்டுவர விரும்பிய கோயில் பூசகர் சட்டம் நிறைவேற்றப்படுமோ என்னவோ! இல்லை, அதற்கும் மாநிலத் தன்னாட்சி தேவைப்பட்டாலும் படலாம்.

மதங்கள் எப்படி உருவாயின என்பதற்கு நாம் தடித் தடியான வரலாற்று நூல்களைத் தேடிப் படிக்க வேண்டுவதில்லை. நம்முடைய தமிழகத்தின் கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுக் காலத்தில் நாம் வாழ்ந்திருந்தால் போதும். சமணமும் புத்தமும் மட்டுமல்ல – இசுலாமும் கிறித்துவமும் இன்னுஞ் சொன்னால் மாலியத்தின் சிவனியத்தின் முக்காற் பகுதிகளும் – இந்துமதத்தின் குப்பைத் தொட்டிக் கோட்பாடுகளும் – அனைத்தும் தோன்றிய வரலாறெல்லாம் இப்படித்தான் என்று அறிந்துகொள்ளலாம்! முன்னர்ச் சொற்களாக இருக்கும்; பின்னர் மெய்ம(தத்துவ)மாக மாறும்; அதன்பின்னர் மந்திரமாக விளங்குவதென்று, விளம்பரப் படுத்தப்பெற்று மக்களை அடிமைப்படுத்தும், ‘சிவாயநம’ மந்திரங்கள் வேத மந்திரங்கள் தொடங்கி ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்று தொடங்குகின்ற ‘கச்சாமி’ மந்திரங்கள், ‘கருத்தருக்குத் தோத்திர’ மந்திரங்கள், ‘அல்லா’கூ அக்பர் மந்திரங்கள் வரை இப்படி வந்தவை தாம்! நம்(!) ‘கடமை’யும், ‘கண்ணிய’மும், ‘கட்டுப்பாடு’ம் இப்படித்தான் ஒரு காலத்தில் ‘அண்ணா’மதத்தின் மந்திரங்களாக இருக்கும். மொத்தத்தில் நாம்(!) பழைய மதங்களைப் பழிக்கிறோம்; ஆனால் புதிய மதங்களைத் தோற்றுவிக்கிறோம். எப்பொழுதும் இந்த இயற்கை முறையில் பிழையிருப்பதில்லை; நடைமுறைகளில்தாம் பிழைகள் மட்டுமல்ல, மூடநம்பிக்கைகளும் வந்து புகுந்துகொள்ளும். எனவே புதியமத(!)க் கோட்பாட்டுக்காரர்களிடம் பழையமதக் கோட்பாட்டுப் பிழைகளைப் பற்றிச் சொல்வது, பயனளிப்பதாக இருக்குமோ இருக்காதோ? சொல்லியாக வேண்டுவது நம் கடமையாக இருக்கிறது!

– தென்மொழி, சுவடி : 12, ஓலை : 1, 1974