பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

தினமணி, மித்திரன், கல்கி, விகடன், இந்து, எக்சுபிரசு போன்ற இதழ்களின் கையோங்கிய ஓரின நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்கட்டும். இக்கால் பல இழிவான பாலியல் இதழ்கள் வேறுமாணவர்களை பாசக் கயிறுகள் போல் பிணித்துக் கொண்டுள்ளன. அவற்றின் பெயர்களே தமிழ்மொழியை இழிவுபடுத்துவது போல் அமைந்திருக்கும். எழுத்து என்பது ஓரிதழின் பெயர். கசடதபற என்பது மற்றோர் இதழின் பெயர். ஓரிதழின் பெயர் புள்ளி. தலையெழுத்து என்றும் ஓரிதழ் வருகின்றது. இவ்வாறு பற்பல இதழ்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. இவையன்றி அனுராதா, காரிகை, காமம், துக்கடா, மல்கோவா, சரசி, வாலிபம், தேன்கிண்ணம், மதுக்கிண்ணம் போலும் இதழ்கள் குப்பைத் தொட்டியில் மொய்க்கும் ஈக்களைப் போல் நாளுக்கு நாள் மிகுதியும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இவற்றில் பெரும்பாலானவை பார்ப்பனரின் தூண்டுதலால் நடத்தப்பெறும் இதழ்களே! இவை தமிழ்மொழியை இழிவுபடுத்தும் நோக்கத்துடனும் அதில் உள்ள இலக்கிய இலக்கண அமைப்புகளைக் கிண்டல் செய்து தகர்த்தெறியும் எண்ணத்துடனும் பார்ப்பன விடலைகளால் வெளியிடப் பெறுவன ஆகும்.

அவற்றில் வெளிவரும் கதைகளில் வரும் பாலியல் செய்திகளை மற்றொருவரிடம் படித்துக் காட்டவோ, படிக்கக் கொடுக்கவோ முடியாது எனின், அவற்றைப் பற்றி வேறு என்ன சொல்வது? அவற்றின் தலையாய நோக்கம் தமிழ்ப் பண்பாட்டைக் கெடுக்க வேண்டுமென்பதும், தமிழ் இலக்கியங்களையும் நெறிநூல்களையும் அழித்துவிட வேண்டும் என்பதுமே ஆகும். மற்றும் அவ்விதழ்களில் வரும் படங்களோ இழிவின் கழிவறைகள், குமுகாயக் கேடர்களின் வெறியாட்ட உடலுறவுச் செய்திகள். அமெரிக்க நாகரிகத்தை இங்கு வேரூன்றச் செய்யும் நோக்கத்தோடு மட்டும் வெளியிடப்பெறுவன அல்ல. மறைந்துவரும் ஆரிய வேத, புராண, இதிகாசங்களுக்கு மீண்டும் மதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்னும் கருத்தோடும் வெளியிடப் பெறுவனவாகும். மனவுயர்வை அழித்துவிடும் ஒரு கெடும்பு நிலையில் மக்களைப் படிப்படியாகக் கொண்டு ஆழ்த்திடும் அதேநிலையில், இராசாசி, காஞ்சிப் புதுப் பெரியவாள் போன்றவர்கள் சொல்லும் இராமாயண பாரத, இதிகாச விளக்கங்களும், வேத, புராண, கீதைப் பொழிவுகளும் அமிழ்ந்து போகும் உள்ளங்களுக்குக் கலங்கரை விளக்கங்கள் போல் கருத்திலும் கண்ணிலும் படவேண்டும் என்பதே அவர்கள் உட்கருத்தாகும்.