பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

எந்த ஓர் ஆற்றலும், எந்த இந்துமதக் கொம்பனும் - அவர்களைத் தடுத்து நிறுத்தமுடியாது!

மதம் மக்களைவிட உயர்ந்த அமைப்பன்று. மதம் மட்டுமன்று; எந்த ஒரு மக்கள் அமைப்பும் அம்மக்களைவிட உயர்ந்ததாகிவிட முடியாது. அவர்கள் அறிந்தோ அறியாமலோ அல்லது இன்றோ நேற்றோ அமைத்துக்கொண்ட, அல்லது அமைந்துவிட்ட ஒர் அமைப்பு - அது மக்கள் தொடர்புடையதாகட்டும் - அல்லது கடவுள் தொடர்புடையது என்று கருதப்படுவதுதான் ஆகட்டும்- அவர்களின் - அந்த மக்களின் - முன்னேற்றத்திற்கோ அல்லது வாழ்க்கை மகிழ்ச்சிக்கோ - தடையாக இருக்குமானால், அது தகர்த்துத் தள்ளப்பட வேண்டியதே! விலக்கி வீழ்த்தப்பட வேண்டியதே! அப்படிச் செய்யவியலாத பொழுது, அந்த அமைப்பினின்று விட்டு விலகுவதே மேலில்லையா? அதைத்தான் மீனாட்சிபுரங்களும், பிறவூர்களும் நமக்கு உணர்த்திக் கொண்டுள்ளன. அந்த உண்மையை உணர்ந்துகொள்ள முடியாத அல்லது அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள இயலாத நரம்புத் தளர்ச்சி கொண்ட காஞ்சிக் காமகோடிகளும், கூட்டிக் கொடுக்கும் ‘இதய’ங்களும், காட்டிக் கொடுக்கும் வீடணர்களுந்தாம் அந்த அருமையான முடிவுக்கு மாசு கற்பித்துப் பேசித் திரிவார்கள்!

இனி, இறுதியாக இந்துமதம் என்னும் அணிமணி தொங்கும் ஆரவாரப் பளிங்கு மாளிகையின் ஒர் இருண்ட மூலையில், பல்லியாய் - பூச்சியாய் - புல்லிய தேரையாய் ஒட்டிக் கிடந்த - இரக்கத்திற்குரிய அத் தாழ்த்தப்பட்ட உயிர்கள் - இடிந்து விழப்போகும் அம் மணிமண்டபத்தினின்று - வெளியேறிக் கொண்டுள்ளன! இனி, ஒரிரண்டு சலுகைகளின் பொருட்டு, இந்துமதம் என்னும் அம் மண்டப மூலை - முடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் நாம் என்ன செய்யப் போகிறோம்? இவ்வாழ்க்கை முடிவதற்குள் அவ் விழிவு சேர்ந்த பகட்டு மண்டபத்தினின்று வெளியே போவோமா? அல்லது அதன் இறுதி மூச்சான இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டு திக்கித் திணறித்தான் சாகப் போகிறோமா? அது நம் துணிவையும் தன்மானத்தையும் பொறுத்தது! வீழ்க இந்துமதம்! வாழ்க தன்மானப் பழந்தமிழ் மக்கள்!

- தென்மொழி, சுவடி : 17, ஒலை : 12, 1981