பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

ஆங்கில வழியாகப் படிக்கவும், அவர்களுக்கு இந்தி கற்பிக்கவுமே நேரிடுகிறது என்பதே.

இனி, இவ்வுருக்காலை வளாகத்தில் I.N.T.U.C., C.I.T.U. ஆகிய இரண்டு தொழிலாளர் இயக்கங்களும், அதிகாரிகளுக்கென ஒரு கூட்டமைப்பும், முத்தமிழ் மன்றம் ஒன்றும் (பெரும்பாலும் பார்ப்பனர்களைக் கொண்டது) இருப்பினும், இக்குறைபாட்டினை நீக்கிட எந்த அமைப்பும் முனைந்ததாகத் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 17.3.1983 அன்று தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் சேர்ந்து ஒன்றுகூடி, தமிழ்க்கல்வி வகுப்பின் தேவை குறித்துப் பேசியிருப்பதாகத் தெரிய வருகிறது. அதன் முடிவாக, சேலம் உருக்காலை அனைத்துப் பணியாளர் தமிழ்க் கல்வி கோரும் குழு ஒன்றும் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதன் தலைவராகப் பயிற்சித் துறை மேலாளர் ஒருவரும், கூட்டு அமைப்பாளராக ஒருவரும் ஆகிய இரண்டு தமிழர்கள் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளனராம். அக்குழு இனி, அங்குள்ள பள்ளியில் தமிழ்க் கல்வியை வலியுறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யும் என்று தெரிகிறது.

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கே தமிழ்க் கல்வி மறுக்கப்படும் பொழுது, நாம் எப்படி, கருநாடகத்திலும், அந்தமானிலும் தமிழ்வழிக் கல்வியையும், தமிழ்க் கல்வியையும் வலியுறுத்த முடியும்? இஃதென்ன கொடுமை! தமிழ் நலமும், தமிழின நலமும் நாடும் தமிழர் கட்சிகளும், அமைப்புகளும் தங்களுக்குள் மாறுபட்டும் வேறுபட்டும் இயங்கிக் கொண்டிருப்பதாலன்றோ, பார்ப்பனர்கள், ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல், இப்படி இந்திக்கும் சுமசுக்கிருதத்திற்கும் ஆக்கந்தேடிக் கொள்கின்றனர். மேலும் தமிழக அரசு உண்மையிலேயே தமிழ்நலம் நாடுகின்ற அரசாக இருக்குமானால் இப்படிப்பட்ட தமிழுக்கு மாறான செயல்முறைகள், தமிழகத்திற்குள்ளேயே நடக்க இயலுமா? இளிச்சவாய்த் தமிழர்களும், இரண்டக ஆட்சியாளர்களும் எண்ணி ஆவன செய்வார்களாக.

- தமிழ்நிலம், இதழ் எண். 15, 1983