பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

221


மக்களிடம் விளம்பரப் படுத்துவதும், அவர் கூறும் மதவியல் கருத்துகளைத் ‘தெய்வத்தின் குரல்’ என்று அவரைச் சார்ந்த சிலர் அச்சிட்டு வெளிப்படுத்துவதும், ஏமாற்று நிறைந்த ஒரு குமுகாயக் குற்றமேயாகும்.

இந்தியாவைப் பொறுத்த அளவில், இஃது ஒரு மதப்பித்தமும் மூடநம்பிக்கையும் நிறைந்த நாடு என்பதை எவருமே மறுக்க முடியாது. இங்குள்ள மக்களிடம் தெய்வம் ‘கடவுள்’ என்று சொன்னால், அவற்றுக்கு ‘ஓர் இலக்கணம்,’ ‘ஒரு வடிவம்’ ஏற்கனவே கற்பிக்கப் பெற்றுள்ளது. எனவே மக்களில் யார் தன்னைக் ‘கடவுள்’ ‘தெய்வம்’ என்று கூறிக்கொண்டாலும், மக்கள் அவரை நம்பவே செய்வார்கள். அவர், இவர்களை ஏமாற்றுகிறாரோ இல்லையோ, இவர்களாகவே அவருக்கு ஏமாறக் காத்திருக்கிறார்கள். அவ்வாறு தெய்வம் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்களின் காலடியில் எவ்வளவு செல்வத்தையும் கொட்டுவதற்குக் காத்து நிற்பார்கள். அவர்களின் எந்த ஒரு சொல்லையும் தெய்வம் சொன்னதாகவே நம்புவார்கள். இந்த வாய்ப்பான நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, அத்தகைய மதத் தலைவர் ஒருவர் தமக்குச் சார்பாகவோ, அல்லது தம்மைச் சேர்ந்தவர்களுக்குச் சார்பாகவோ, எதனையும் செய்து கொண்டுவிடவோ, தம் சாய் காலை நிலைநிறுத்திக் கொள்ளவோ முடியும். இவ்வகையில் நாம் முதலில் சொன்ன சூதாட்டத்திற்கும் இதற்கும் எள்ளளவும் வேறுபாடு இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

எனவே, தம்மை ஒருவர் ‘தெய்வம்’ என்றும், தாம் பேசுவது தான், ‘தெய்வத்தின் குரல்’ என்றும் சொல்வது ஒரு குமுகாயக் குற்றமாகக் கருதப்பெறல் வேண்டும். மக்களில் வேண்டுமானால் ஒருவர் உயர்ந்த அறிவு பெற்றவராகவோ, நல்ல மனவுணர்வு வாய்க்கப் பெற்றவராகவோ இருக்கலாம். அதற்காக அவர் தம்மைத் தெய்வம் என்று சொல்வாரானால், மக்கள் அவரை உண்மையாக ஏற்கனவே தாங்கள் அறிந்துகொண்ட தெய்வத்துக்குச் சமமாகவே கருதிக் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. இனி, மக்கள் அப்படிக் கருதுவதற்குத் துணையாக தூண்டுகோலாக - இன்னொரு வாய்ப்பும் நம் நாட்டில் உள்ளது. அஃதாவது, இந்நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஆட்சித் தலைவர்கள்கூட, அஃதாவது குடியரசுத் தலைவர், தலைமையமைச்சர்கள்கூட, அத்தகைய மதக்குருமார்களைப் போய்க் கண்டுவருவதும், அரசியல் நடைமுறைகளுக்கு அவர்களிடம் கருத்துக் கேட்பதும், மக்களுக்கு ஒரு தவறான நடைமுறையை, ஒரு வழிகாட்டுதலைப்