பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/234

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இந்த மதம், இந்தி, இந்தியா, இந்திரா!

‘வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்’ என்னும் ஒரு பழமொழி உண்டு. இந்தியாவின் தலைமையமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் திருவாட்டி இந்திரா காந்தி அம்மையாரின் நடவடிக்கையில் இந்தப் பழமொழி மிகவும் நன்றாகப் பொருந்துகிறது. அவரின் அண்மைக்காலச் செயற்பாடுகளில் அவரின் உண்மை உருவம் நன்றாக வெளிப்பட்டிருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். தமக்குப் பிடிக்காத மாநில முதலமைச்சர்களை அப்புறப்படுத்துதல், எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கமளித்து, மறைமுக ஆதரவுகாட்டி, மாநில அமைச்சரவைகளைச் சீர்குலைத்தல், எவ்வளவு பெரிய அரசியல் அறிஞர்களாயினும் (தேசாய், சந்திரசேகர், வாச்சுபாயி, சரண்சிங், செகசீவன்ராம் முதலியோர்) தம்மொடு ஒத்துப் போகாதவரைத் தனிப்படுத்தி அழித்தல் முதலிய அரசியல் நடவடிக்கைகளுடன், மக்களிடம் தமக்கு நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவு தேடித் தமக்குள்ள சாய்காலைப் பெருக்கிக் கொள்ளுதல், தேசிய ஒருமைப்பாடு, இந்திய ஒற்றுமை என்னும் பெயரால் தேவையற்ற இந்துமத உணர்வுகளைப் பரப்புதல், இந்திமொழியை மீண்டும் பரவலாக்குவதற்கான முயற்சிகளில் துணிந்து ஈடுபடுதல் போன்ற குமுகாய நடவடிக்கைகளையும் அவர் மிகவும் தந்திரமாகச் செயல்படுத்தி வருகிறார்.

இந்திய நாட்டுப் பொதும்ககளும் குறிப்பாக இளைஞர்களும் அரசியல் அறிவு பெறமுடியாத வண்ணம், அவர்களின் மனங்களை