பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/298

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


விழுங்குவது! ஆணோடு ஆண் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெறுவது! குழந்தை தாயின் வயிற்றுக்குள் இருக்கும்பொழுதே அனைத்துக் கல்வியையும் கற்பது! பாம்புப் புற்றுக்குள் புகுந்து வேறோர் உலகத்தை அடைவது! கதிரவனுக்கு(சூரியனுக்கு)க் குழந்தை பிறப்பது ! நிலவுக்கு(சந்திரனுக்கு)க் குழந்தை பிறப்பது! காற்றுக்கு(வாய்வுக்கு)க் குழந்தை பிறப்பது! நெருப்புக்கு(அக்னிக்கு)க் குழந்தை பிறப்பது! மழைக்கு(இந்திரனுக்கு)க் குழந்தை பிறப்பது போன்ற பல்லாயிரக் கணக்கான புளுகு மூட்டைகள் நிரம்பிய கட்டுக் கதைகளே ஆரியர்களின் புராண இதிகாசப் பொய்ச் சரக்குகள்! இம் மூட நம்பிக்கைகளை உண்மைகள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களே இந்துமதத்தவர்கள்! இவர்களில் பெரும்பாலரே இன்றைய தமிழ் இனத்தவர்கள்! இவர்களுள் நீங்களும் ஒருவராக இருக்கலாமா? எண்ணிப் பாருங்கள்! உங்கள் அறிவுக்கண் கொண்டு, அறிவியல் உணர்வு கொண்டு சிந்தித்துப் பாருங்கள்! இம்மூட நம்பிக்கைகளை யெல்லாம் உண்மை என்று நம்புவது, சாணியையும், மலத்தையும் உணவு என்று நம்பி உண்ணுவது போலாகும்!

அதுவுமின்றிப் பிரம்மதேவன் என்பவன் முகத்திலும், தோளிலும், தொடையிலும், பாதத்திலும் மக்கள் பிறக்க முடியுமா? அப்படிப் பிறந்தவர்கள்தாம் வேறு வேறு வரணத்தினர், குலத்தினர், சாதியினர் என்றால், நாம் அதை நம்பலாமா? அப்படி நம்புபவர்கள்தாம் இந்து மதத்தவர்கள் என்றால் அந்த இந்துமதத்தை நாம் ஒப்பலாமா? நாமும் இந்துக்கள் என்று ஏற்றுக்கொள்ளலாமா? எண்ணிப் பாருங்கள்! சிந்தித்துப் பாருங்கள்!

நீங்கள் மூடநம்பிக்கைகளை உடைய மூடர்களா? அறிவுடைய மக்களா? அவ்வாறானால் இந்த மூட நம்பிக்கைகளைக் கொண்ட நீங்கள் இந்துமதத்திலிருந்தும் அது கூறும் சாதி இழிவுகளிலிருந்தும் வெளியே வாருங்கள்! உங்களை மாந்தராக முன்னேற்றிக் கொள்ளுங்கள்! உங்களைப் பிணித்திருக்கின்ற சாதி, மதக் கயிறுகளை - கட்டுகளை அறுத்தெறியுங்கள்! மாந்தன் என்னும் உரிமையுடன் இவ்வுலகின் இயற்கைக் காற்றை உட்கொள்ளுங்கள்! நீங்கள் மாந்த இனத்தில் ஒருவர்! நீங்கள் சாதி, மதப் பெயர்களால் அழைக்கப்படக் கூடாது! நீங்கள் முன்னேறிய மாந்த இனத்தவர்! நீங்கள் தமிழர்! உங்கள் தாய்மொழி தமிழ்! உங்கள் நாடு தமிழ்நாடு!

- தமிழ்ச்சிட்டு, குரல் : 22, இசை : 10, 1994