பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

பாவலரேறு ஐயா அவர்களின் நூல்கள் தமிழியக் கொள்கை நோக்கின. தமிழ் மொழி, இன, நாட்டு உரிமைகளுக்காகப் போர்ப்பறை கொட்டுவன.

அவரின் எண்ணமும், எழுத்தும் தமிழனின் அடிமை நிலைக்கெதிராக ஓயாமல் அலைவீசிக் கொண்டிருப்பன. அறிவின் பெருநெருப்பாய், ஆற்றலின் குறைக்காற்றாய் இருந்த ஐயாவின் பேரியக்கம், அவரின் படைப்புகளுள் இன்றும் கனன்று கொண்டிருக்கின்றன.

விடுதலை விடாய்த் தணியாத ஐயாவின் எழுத்துகள் உணர்வு சான்றன, பொய்ம்மையைச் சாய்த்து மெய்ம்மையை நிறுவச் செய்வன, ஆரிய இருள் கிழித்துத் தமிழிய ஒளி பாய்ச்சுவன, ஆளுமை அரசை வீழ்த்தும் பொதுமை வாழ்வு நோக்கியன.

எனவே அவரின் எழுத்து உயிர்ப்பாற்றல் கொண்டவை. உயிர்ப்பிக்கும் உணர்வு சான்றவை.

ஐயா அவர்களின் பாக்கள் எப்படி வீரிய ஆற்றல் சான்றவையோ அப்படி அவரின் உரைநடை நேரிய சீற்றம் கொண்டவை.

எவ்வகை அடக்குமுறைகளுக்கும் அடங்காமல் வீறிட்டுப் போர்க்குரலாய் ஒலிப்பவை.

ஆரியக் கொட்டங்கள் குறித்தும், சாதியத் தீமைகள் குறித்தும் ஐயா அவர்களின் உரைவீச்சுகள் எதிரிகளின் குலைகளை நடுங்க வைத்தன.

1995 – தம் வாழ்நாள் இறுதிநாள் வரை ஐயா அவர்களால் எழுதப்பெற்ற ஆரியப் பார்ப்பனர் குறித்த கட்டுரைத் தொகுப்புகள் யாவும் கால வரிசைப்படுத்தப்பட்டு ‘ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்’ எனும் இத் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.