பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

இவ்வாறு எங்கும் எத்துறையிலும் அவர்கள் நீக்கமற ஊடுருவி, ஊக்கமுற உழைத்து அவர்தம் இன முன்னேற்றத்தை ஆக்கமுறச் செய்வதைப் பெரும்பான்மைத் தமிழர் இன்னும் உணர்ந்திரார். அவ்வாறு அவர்கள் ஊடுருவி நிற்பதற்கு அவர்களுக்கிருக்கும் சூழ்ச்சி வாய்ந்த மூளைத்திறனும், கலையுணர்வும் கரவும் பொதிந்த நடிப்பும், அன்பொழுகுமாறு பேசும் பேச்சும் தேவையான பொழுது நாணத்தையும் பண்பாட்டையும்கூட கைவிட்டுவிட்டு மேற்செல்லும் வினைத்திறனுமே காரணங்களாகும். இவற்றில் ஒன்றேனும் நம் தமிழரால் இன்னும் செப்பமாகக் கடைப்பிடிக்கப் படுவதில்லை. சூழ்ச்சி நமக்கு எதிராகச் செயல்படும் பொழுதில் நாம் நடுநிலையைக் கையாள வேண்டிய தேவையில்லை. இனி, இவற்றையெல்லாம் இங்கு எதற்காகக் குறிப்பிடுகிறோமென்றால், நம்மைக் கீழறுக்கும் வேலை, எத்துணை ஆற்றலொடும் முடுக்கத்தொடும் இந்திய ஒற்றுமை, தேசியம் என்ற பொன்முலாம் பூசப்பட்ட பெயர்களால் செயற்படுத்தப் பெறுகின்றது என்பதை உணர்த்திக்காட்ட வேண்டியே ஆகும்.

இவ்வாறு, இந்திய ஆட்சி என்பது வெளிப்படையாகக் குடியரசு எனப்பட்டாலும், உள்முகமாகப் பார்ப்பனராலும், வடவராலும் பிற இனங்களை ஆரியத்தால் ஆளப்படுகின்ற ஓர் ஆட்சியாகவே கருத வேண்டியுள்ளது. எனவே இப்படிப்பட்ட ஓர் ஆட்சியில் தமிழர்கள் தங்கள் மொழி, இன, பண்பாடு முதலிய அடிப்படைக் குமுகாய உரிமைகளை அழித்துக்கொண்டே வாழ வேண்டியுள்ளது. இவ்வடிப்படை உரிமைகளை முற்றும் இழந்துகொண்டு தமிழரினம் வாழ்ந்துகொண்டிருப்பதைவிடத் தன்னுரிமை பெற்றுச் செத்துப்போவது எவ்வளவோ மேலென்று கருதவேண்டி உள்ளது.

தமிழர்களில் ஒரு சாராரும், இந்தியர்களில் பெரும்பான்மையோரும் பேராயக்கட்சி போன்ற பெரிய தேசியக் கட்சிகளில் இருந்து இந்தியாவைக் குமுகாய அளவிலும், அரசியலளவிலும் சீர்திருத்திவிட முடியும் என்பது வெறும் கனவுக் கற்பனைகளாகவே முடியும் என்பது திண்ணம். அவர்கள் எத்துணையளவு சிறந்த கோட்பாடுகளையும் திட்டங்களையும் கொண்டதாகத் தங்கள் கட்சியை அமைத்துக்கொண்டாலும், அத்துணைச் சிறப்பும் வடவரின் அதிகார வெறியாலும் பார்ப்பனரின் சாதிசமய பூசல்களாலுமே சிதைத்தொழிக்கப்படும் என்பதை உண்மை அறிவுடையோர் எவரும் எளிதே கண்டுகொள்வர். குறிப்பாகப் பார்ப்பனர்க்கிருக்கும் படைக்