பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

பாஸ்கரத் தொண்டைமான்

உருவாகியிருக்கிறது. அவள் கனவில் முருகன் தோன்றி, தனக்குச் சேர வேண்டிய சொத்தும் அதற்குரிய சாஸனமும் எங்கே புதைந்து கிடக்கிறது என்பதையும் சொல்லி இருக்கிறான். அதைக் கண்டெடுத்து அந்தச் சொத்தை வைத்திருந்தவருடன் வழக்காடி கிட்டத்தட்ட 150 கோட்டை நன்செய் நிலங்களையும், தோப்பு முதலியவைகளையும் கோயிலுக்குச் சேர்த்திருக்கிறாள். இந்த அம்மையார் இப்படி செய்த கைங்கரியத்தினால் தான் திருமலை முருகன், இம்மலை மீது நிலைபெற்றிருக்கிறான் என்று அறிகிறபோது நாம் பூரித்து விடுகிறோம்.

இந்த திருமலை முருகனைக்காண நாம் நேரே செங்கோட்டை ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கட் எடுக்க வேண்டும். அங்கிருந்து ஐந்து மைல் வண்டிவைத்துக் கொண்டோ, நடந்தோ செல்ல வேணும். அவகாசம் இருந்தால் காலையிலும் மாலையிலும் செல்லும் பஸ்ஸுக்காக காத்து நிற்கவேணும், தென்காசியில் இறங்கினாலும், குற்றாலத்தில் தங்கி இருந்தாலும், அங்கிருந்து காலையிலும் மாலையிலும் செல்லும் பஸ்களிலும் செல்லலாம். இல்லை டாக்சி வைத்துக்கொண்டு செல்லலாம். சொந்தக் கார் உடையவர்கள் என்றால் ஜாம்ஜாம் என்று காரிலேயே சென்று மலையடிவாரத்தில் இறங்கலாம். அதன் பின் மலை ஏறவேணும். மலையடிவாரத்தில் ஒரு பெரிய மண்டபம். அதில் ஒரு கோயில் அங்கு இருப்பவர்தான் வல்லபை கணபதி. எல்லாம் வல்ல சக்தியையே தன் தொடை மீது தூக்கி வைத்துக் கொண்டிருப்பார் அவர். அவரைக் கண்டதும் நமக்கு வடநாட்டு ஞாபகம் தான் வரும் வடநாட்டில் கார்த்திகேயன் கட்டைப்பிரமச்சாரி. கணபதி தான், சித்தி புத்தி என்னும் இருவரை மணந்தவர். அதே போல, திருமலையிலும் கணபதிதான் வல்லபையுடன் இருக்கிறார். அவர் தம்பி திருமலைமுருகனோ தனித்தே நிற்கிறான். வல்லபை கணபதியை வணங்கி விட்டு மலைமேல் ஏறவேணும் முன்னர் அமைந்திருந்த பாதையில் 544 படிகளே இருந்தன. சில பகுதிகள் செங்குத்தாக ஏற வேண்டியிருக்கும் ஆனால் இன்றோ ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகள் கட்டிவைத்திருக்கிறார்கள். இப்போது மொத்தம் 615 படிகள் இருக்கின்றன. பழநிமலை ஏறும் துரத்தில் பாதி தான். திருத்தணிமலை ஏறுவதுபோல் இரண்டு பங்கு ஏறவேணும். ஆனால் கொஞ்சம்சிரமப்பட்டு பழைய படிக்கட்டுகளில் ஏறினால், மலைமேல் உள்ள உச்சிப் பிள்ளையாரையும் வணங்கிவிட்டு திருமலைமுருகனை-