பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

பாஸ்கரத் தொண்டைமான்


ஆதங்கத்துடனே கேட்கிறார். உண்மைதான். திருமுருகாற்றுப் படையை நன்றாகப் பொருள் விளங்கும்படி எளிமையோடு இனிமையோடும் சொல்லிவிட்டால், அதைப் படிப்பவர் தொகை பல்கிப் பெருகும் அல்லவா? நிரம்பச் சொல்வானேன். மேலே சொல்லியிருக்கும் அடிகளின் பொருளே: “அழகிய சிறகுகளை உடைய வண்டுகள், கரிய சேற்றில் மலர்ந்த தாமரைப் பூக்களில் இரவெல்லம் உறங்கி, விடியற் காலையிலே விழித்து எழுந்து, நெய்தல் பூவை ஊதி, சூரியன் உதித்ததும் கண்கள் போல் மலர்ந்த அழகிய சுனைப் பூக்களில் சென்று ஆரவாரிக்கும். இத்தகைய சிறப்பினை உடைய திருப்பரங்குன்றத்திலே முருகன் வீற்றிருக்கிறான்” என்பதுதானே. இன்னும் சுருங்கச் சொன்னால், வண்டுகளுக்கு மலர்கள் தேனைக் கொடுத்து உதவுவதுபோல, அடியார்களுக்கு முருகனும் அவர்கள் வேண்டுவதைக் கொடுத்து, திருவருள் புரிவான் என்பது தானே கருத்து. இதைத் தானே இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பு, அன்று செல்வாக்கு உடையதாக இருந்த அழகு தமிழ்ச் சொற்களிலே சொல்லியிருக்கிறார். இடையே இரண்டாயிரம் வருஷங்கள் கழிந்த காரணத்தால் பல சொற்கள் வழக்கிழந்து போக அச்சொற்களும் சொற்றொடர்களும் இன்று நமக்கு விளங்கவில்லை. ஆதலால் அத்தகைய அரிய நூலை படிப்பதையே நிறுத்திவிடுகிறோம் நாம்.

மேலும் ஒரு கேள்வி. 'ஆற்றுப்படை என்றால் என்ன? ஊர்தோறும் ஓடும் ஆற்றுக்கும், படை எடுக்கும் படைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? என்று கூடக் கேட்பவர்கள் இருக்கிறார்கள். முருகாற்றுப் படை என்றால் 'முருகனிடத்து வழிப்படுத்துதல்' என்றுதான் பொருள். முருகனது திருவருள் பெற்ற ஒரு கவிஞன், அதே அருளைப் பெற விரும்பும் மற்றவர்களுக்கு, அக்கடவுளின் தன்மை, பெருமை, இருப்பிடம் முதலியவற்றைப் பற்றி விரிவாகக் கூறி, அவர்களை நல்வழிப்படுத்துகிறான். இதுவே ஆற்றுப்படையின் அடிப்படை.

முருகன் வீற்றிருக்கும் இடம் ஆறு. அவை முறையே திருப்பரங்குன்றம், திருச்சீர் அலைவாய் என்னும் திருச்செந்தூர், ஆவினன்குடி என்னும் பழநி, ஏரகம் என்னும் சுவாமிமலை. ஏனைய குன்றுகள், பழமுதிர்சோலை என்பனவாம். முதலில் திருப்பரங்குன்றத்தின் இயற்கை அழகுகளையும் தெய்வ மகளிர்