பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

பாஸ்கரத் தொண்டைமான்


இப்படிச் சிறு குறும்பு செய்யும் குமரகுருபரனாம் குமரனை குமரகுருபரரே பாடி மகிழ்கிறார். நாமும் இன்னிசையிலேயே பாடி மகிழலாம் பாடத் தெரிந்தால்.

குமரகுருபரர், முருகன் அருள் பெற்று உயர்ந்த கவிஞர். தண்பொருநைக் கரையிலே உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அவதரித்தவர். ஐந்து வயது நிரம்பும் வரை பேச்சின்றி ஊமையாக இருந்தவர். இது கண்டு வருந்திய பெற்றோர்கள் அவரை திருச்செந்துருக்கு எடுத்துச் சென்று செந்தில் ஆண்டவன் சந்நிதியிலே கிடத்தி அவனிடமே குறை இரந்து நின்றனர். செந்தில்மேய வள்ளி மணாளன் திருவருளால் குமரகுருபரர் பேசும் ஆற்றல் பெற்றார். பேச்சே கவி வடிவத்தில் வந்தது. கந்தர் கலி வெண்பாவை அந்தச் சிறுவயதிலேயே அறுமுகன் திருவருளால் பாடியவர். அதன்பின் முறையாக இலக்கிய இலக்கணங்களோடு ஞான சாத்திரங்களையும் கற்றார். பின்னர் மதுரை சென்று மீனாட்சியம்மை பேரில் ஒரு பிள்ளைத் தமிழ்பாடி அதை அப்போது மதுரையில் அரசாண்ட திருமலை நாயக்கர் முன்னிலையிலே அரங்கேற்றினார். அரங்கேற்றம் நடக்கும் போது, மீனாட்சி அம்மையே குழந்தையுருவில் வந்து, திருமலை நாயக்கர் மடிமீது அமர்ந்து கேட்டு மகிழ்ந்தனள் என்றும், 'தொடுக்கும் கடவுள் பழம் பாடல்' என்று தொடங்கும் திருப்பாட்டைக் கேட்டபோது தன் கழுத்தில் கிடந்த முத்துமாலையையே எடுத்து, குமரகுருபரருக்கு அணிந்து மறைந்தாள் என்பதும் வரலாறு. பின்னர் பல தலம் சென்று. தருமபரத்துக் குருமூர்த்தியான மாசிலாமணி தேசிகரிடம் ஞானோபதேசம் பெற்றிருக்கிறார். அதன் பின் காசி சென்று பாதுஷாவிடம் தன் அருள் திறத்தைக் காட்டி, கேதாரகட்டத்தில் இடம் பெற்று காசிமடம் நிறுவி இருக்கிறார். இடையிலே வைத்தீஸ்வரன் கோயிலிலே இருக்கும் முத்துக் குமரனிடத்தும் பக்தி செலுத்தி, அவன் பேரில் ஒரு நல்ல அழகிய பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தம் ஒன்றும் இயற்றி இருக்கிறார். அவர் பாடிய நீதிநெறி விளக்கம், சகலகலாவல்லி மாலை எல்லாம் இலக்கிய உலகில் பிரசித்தமானவை என்றாலும் பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட முருகன் பேரில் பாடிய, கந்தர் கலிவெண்பாவும், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழும் அவருக்கு நிரந்தர புகழைத் தேடித் தந்திருக்கின்றன.