முகவுரை
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலங்களுள் ஆற்று வளம் பெற்ற மருத நிலமே மனிதர் பயிர் செய்யவும், தொழிலையும் வாணிகத்தையும் பெருக்கவும், கலைகளை வளர்க்கவும் வாய்ப்புடையது. எனவே, ஆற்றங் கரைகளிலேதான் நாகரிகம் மலர்ந்தது என்பது வரலாறு கண்ட உண்மை. இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டே இந்நூலில் பாலாற்றங்கரை நாகரிகம், காவிரிக் கரை நாகரிகம், வையைக்கரை நாகரிகம் என்னும் மூன்று பகுதிகள் எழுதப் பெற்றுள்ளன. இவை முறையே தொண்டை நாட்டு நாகரிகம், சோழ நாட்டு நாகரிகம், பாண்டிய நாட்டு நாகரிகம் என்னும் மூன்றையும் குறிப் பனவாகும்.
ஆற்றங்கரை நாகரிகம்' எனனும் பெயர் கொண்டு வெளிவரும் இந்நூல், உயர் வகுப்பு மாணவர்கட்கு உரியது. இதன்கண் உள்ள ஒவ்வொரு நாகரிகமும் ஆறு, அரசர், அரசியல், இலக்கியச் சிறப்பு, கலைச் சிறப்பு, என்னும் ஐந்து பகுதிகளைக் கொண்டது. இந்த ஐந்து பகுதிகளிலும் முறையே ஆற்றைப் பற்றிய விவரம், அரசர்களைப் பற்றிய செய்திகள், அரசியல் அமைப்பு, நாட்டு இலக்கியவளர்ச்சி, கலைவளர்ச்சி, என்பன சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. இவற்றைப் படிக்கும் மாணவர் தென்னிந்திய வரலாற்றை யும் தமிழ் நூல்களையும் கல்வெட்டுக்களையும் படித்துத் தம் தாய் நாட்டுச் சிறப்பை நன்கு அறிய வேண்டும் என்பதே இந்நூல் எழுதப் பெற்றதன் நோக்கமாகும்.
மா. இராசமாணிக்கம்