பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

மூன்றும் சேர்ந்து செயல்படுவதுதான் ஒருவனும் ஒருத்தியும் என்ற உயர்ந்த கொள்கை.

அங்கே நீலப்படங்கள் பார்க்க அவர்களுக்குத் தடை இல்லை. ‘பாலியல்’ என்பது என்ன என்று அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது; நட்பியலில் ஆடவச் சிறுவர்களோடு தொடங்கிப் பாலியலில் வாலிபப் பருவத்தில் தொடர்பு கொள்ளும் வாய்ப்பும் வழியும் அவர்களுக்கு உண்டு; பாலியல் காதலாக மலர்ந்து மணக்கிறது. இது: அந்த நாட்டு வரைவியல்.

இங்கே ‘முதலிரவு’ என்ற ஓர் அற்புதமான அலங்கரிக்கப்பட்ட மலர்கள் விரித்த மஞ்சத்தில் அவன் அவளைச் சந்திக்கிறான்; அந்த இரவே அவன் மூன்றையும் அறிகிறான்; அவள் அவனுக்குத் தேவைப்படுவதால் அவள் அவனைக் காதலிக்கிறாள். இதற்கு அடிப்படை மணம்; மணம் முடிந்தபின் முதல் பாடம் படிக்கிறான்; காதலிக்க அறிகிறான். மூன்றும் இணைந்த அதனை மணவாழ்வு என்று ஏற்கிறான்.

இந்த மூன்றும் ஒட்டாதபோது ஒன்றை ஒன்று தழுவாத போது அதிர்ச்சிகள் தோன்றுகின்றன. கன்னிப் பெண் காதலால் கருத்தழிந்து பாலியலில் கால் வைத்தால் மற்றையவை தொடராவிட்டால் அதிர்ச்சி அவளை அணுகுகிறது . மணக்க முடியாதவளை முதற்படியிலேயே சந்தித்து விட்டுவிட்டாலும் தொல்லைதான். அவர்கள் இந்த மூன்றும் வெவ்வேறு என்று அறிந்து செயல்படும் வாய்ப்பும் தெளிவும் ஏற்பட்டிருப்பதால் அதிர்ச்சிகள் ஏற்படுவது இல்லை. இதயக்கோயில் கதாநாயகியைப் போல் கயிற்றைத் தாலிக்குப் பயன்படுத்துவதற்கு மாறாகக் கழுத்தைச் சுருக்கிக் கொள்ளப் பயன்படுத்துவதில்லை.