பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. ஆதித் தாய்

இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. மனித சமுதாயம் எப்போது, சமுதாயம் என்ற நாகரிகம் காண மலர்ந்தது? ஆணும் பெண்ணும் எப்படி வாழ்ந்தார்கள்?

இறைவன் முதலில் ஆணையே படைத்தான். பின்னர் அவனுக்கு அடங்கிய துணையாக, அவனிலிருந்து ஒரு பகுதியை வைத்தே பெண்ணைப் படைத்தான், என்ற வகையில், சமயங்கள் சார்ந்து பல கருத்துக்கள் கற்பிக்கப் பட்டிருக்கின்றன. என்றாலும், ஆதிமனிதர் வரலாறு, பெண்ணை அப்படி ஒரு துணைப் பிறவியாக இனம் காட்ட வில்லை என்பதே சரியாகும்.

வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், மனிதர் விலங்குகளைப் போன்றே வாழ்ந்திருக்கிறார்கள். நிலத்தில் கொடிய விலங்குகளுக்கு அஞ்சி, குரங்குகளைப் போல் மரக் கிளைகளில் தங்கியும், கூடி இனம் பெருக்கியும் வாழ்ந்தார்கள். தரைக்கு இறங்கி, நிமிர்ந்து, இரண்டு கைகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியதும், பின்னர் நெருப்பின் பயன்களைக் கண்டு கொண்டதும் மனித வாழ்க்கையின் அற்புதமான திருப்பங்களாகும்.

வாழ்வில் அச்சம் நீங்கியது; நடுக்கும் குளிரில் இருந்து மீட்டு வெம்மையாகிய இன்பம் இசைந்தது. சமைத்த ஊன் சுவையாக இருந்தது. எளிதில் சீரணமாயிற்று.

தீயின் ஆற்றலை உணர்ந்த ஆதிமனிதரின் அறிவுக் கண்கள் புத்தொளியுடன் வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாயிற்று.