பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10

இந்திய சமுதாய... /ஆதித் தாய்


அறிவும் சிந்தனையும் கைத்திறனும் சொல்லாற்றலை மலரச் செய்தன. வெறும் இயல்பூக்க உணர்வினால் மரக் கிளைகளில் கூடி இனம் பெருக்கிய மக்கள், அந்த ஆற்றலை, மனித வாழ்வின் தலையாய பேறாக இனம் கண்டனர். கூடலுக்கான விழைவும், கடலும், அதன் பயனான மகப்பேறும் புதிய பரிமாணங்களைப் பெற்றன.

ருக்வேதம் முதல் மண்டலத்தில் அதிதியைப் போற்றிப் புகழும் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. வானும், வளிமண்டலமும் உலகங்களும், உயிர்களும் இவளிலிருந்தே தோன்றின என்று படைப்புக்களுக்கெல்லாம் மூலதாரமாகத் தாய்ச்சக்தி போற்றப்பட்டிருக்கிறாள்.

அதிதி வான்; அதிதி வளிமண்டலம்; அதிதி தாய்; தந்தை; மகன்; அதிதியே கடவுளர் (விச்வே தேவா:) அதிதியே ஐந்தொழில் புரிவோர் (பஞ்ச ஜனா:) அதிதியே பிறந்த, பிறக்கப்போகும் உயிர்கள்... (ருக்1-14-5)

இறைவனே பெண்ணாகவும் ஆகி, இருகூறுகளிலிருந்தும் முதல் பிரஜையைப் பிறப்பித்தான் என்றும், திருமாலின் உந்திக்கமலத்திலிருந்து படைப்புக்கடவுள்-(ஆண்) பிறந்தார் என்றும் முக்கண்ணனின் நெற்றிக்கண்ணில் தெறிந்த பொறிகளில் இருந்து குமரக்கடவுள் தோன்றினார் என்றும் பெண்ணின் கருப்பைச் செயல்பாட்டையும் தாய்த் தன்மையையும் மறுக்கும் கற்பிதங்கள் இந்நாட்களில் தெய்வம் சார்ந்து நிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால் ருக்வேதம் காட்டும் இப்பாடல், தாயாண்மையின் முழுப்பிரதிபலிப்பாகவே திகழ்கிறது.

பெண் ‘தாய்’ என்று அறியப்பெற்றாள். ‘ஜனி’ உயிரைப் பிறப்பிப்பவள் என்ற மாண்புடையவளானாள். இவள் பிறப்பித்த உயிர்கள் ‘ஜனம்’ என்று அறியப்படலாயினர். ‘ஜனம்’ என்ற குழுவின் தலைவியாக தாய் விளங்கினாள். இவள் பேராற்றல் மிகுந்தவள். இவள் தலைமையில் மக்கள் வேட்டைக்குச் சென்றனர். காட்டுத் தீயைக் குகைக்குள் பாதுகாக்கக் கற்றுக் கொண்டார்கள். இறைச்சியை