பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



28

இந்திய சமுதாய.../தாய்மையின் வீழ்ச்சி


“ஆம்! நீ பதிதை; பாவி; உயிர்வாழத் தகுதியில்லாதவள்! பரசுராமா! இவளைக் கொள்!”

பரசுராமனுக்கும் தாயைக் கொல்ல மனம் வரத்தானில்லை. ஆனால் மூத்தவர்களான தமையன்மார், தந்தையின் சாபத்துக்கல்லவோ ஆளானார்கள்!

எனவே, தந்தை சொல்லை நிறைவேற்றுவதே தலையாய கடன் என்று அவன் வாளை வீசித் தாயைக் கொல்கிறான்.

மக்கள்-தாய்-என்ற பாசப்பிணைப்பில், சுதந்தரமான அன்பில் வீழ்ந்த வெட்டு அது.

இது அப்படியே ஒடுங்கிற்றா?

இல்லை. தாய், இவளில்லாமல் உலகில்லை. மண்ணிலும், கோடானு கோடி உயிர்க் குலங்களிலும் சக்தியாய் இயங்கும் தாய்.

இவளை அடியோடு வீழ்த்திவிட முடியுமா?

முனிவரைக் குற்ற உணர்வு குத்துகிறது. இவரைப் பெற்றவளும் ஒரு தாய் தானே? இவர் வித்தைச் சுமந்து மக்களுக்குப் பிறவி கொடுத்தவள் அவள். அவளையா கொலை செய்யச் சொன்னார்?

“மகனே! உன் செயல் கண்டு மனம் நெகிழ்ந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்!” என்று உருகுகிறார்.

“எந்தையே, என் அன்னை மீண்டும் உயிர் பெற்று வரச் செய்ய வேண்டும்!” என்று கோருகிறான் மைந்தன்.

உண்மையான துயரங்கள் வரலாறாக வடிவெடுக்கும் போது, அவை துயரங்களாக முடிவு பெறுவதில்லை.

திரைப்படங்களில், தற்கொலை செய்து கொண்ட காதலர்களை மேல் உலகில் இணைவதாகக் காட்டி விடுகிறார்கள்.