பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4.ஐவரின் தேவி


திராவிட மக்களின் வெற்றித் தெய்வமாகக் ‘கொற்றவை’ என்னும் தாய்த் தெய்வம் கொண்டாடப் பெற்றிருக்கிறாள்.

இவளை, முருகனுடைய தாய் என்று திருமுருகாற்றுப் படை-(258) (வெல் போர் கொற்றவைச் சிறுவ!) குறிக்கிறது. இவளுடைய வழிபாட்டைச் சித்திரிக்கும் நூற்பகுதிகளில் இருந்து, இவள் வழிபாடு வெறியாட்டுடன் நடைபெற்றதென்று அறிகிறோம்.

நெடுநல்வாடையில், போருக்குத் தலைவனைச் செலவு விடுத்த தலைவியின் தோழியர், தலைவன் வெற்றியுடன் மீள வேண்டும் என்று வெற்றித் தெய்வத்தை வணங்குகிறார்கள். வணக்கத்தைப் பெறும் அவ்வெற்றித் தெய்வம் கொற்றவையே. கொற்றவைக்குப் பலி கொடுத்து வாழ்த்துதலைக் கொற்றவை நிலை-(தொல்-பொருள்-26) என்று தொல்காப்பியம் குறிக்கிறது.

இதோபோல் கொற்றவை வழிபாடு, பதிற்றுப்பத்து 79ம் பாடலிலும் குறுந்தொகை 218ம் பாடலிலும் காணப்பெறுகிறது.

இந்தக் கொற்றவைத் தெய்வத்துக்கு நாயகன் குறிக்கப் பெற்றிருக்கவில்லை. எவ்வாறு, ருக்வேதம் கூறும் துவக்க கால சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் “அதிதி”யாம் தாய்க்கு நாயகர் வரையறுக்கப்படவில்லையோ, அவ்வாறே, இங்கு கொற்றவை தனித் தெய்வமாகவே விளங்குகிறாள்.

அதிதி, எல்லையற்ற கருணையும் அருளும், வண்மைகளும் உரிய தெய்வமாக வழிபடப் பெறுகிறாள். கொற்றவையோ, நேர்மாறாக, போரில் வெற்றி காண்பதற்காக, வெறியாட்டம், குருதிப்பலி என்ற பயங்கரங்களுடன் வழிபடப்பெறுகிறாள்.