பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



34

இந்திய சமுதாய.../ஐவரின் தேவி


அரசவைகளில் இன்றியமையாத பொறுப்பேற்றிருந்த பாணர்-பாண்மகள் தேவதாசியாக மறுபிறப்பெடுத்தாள்.

மேல் வருணத்தினரால் ஒடுக்கப்பட்டும் வீழ்த்தப்பட்டும் குலைக்கப்பட்ட சக்திகள், சிதறுண்ட மக்களின் சிறு தெய்வங்களாக உருப்பெற்றன. அதே மேல் வருக்கத்தினர், அச்சம் மேலிட வழிபடக்கூடிய சடங்குகளில், அச்சக்திகள் காலத்தை வென்று ‘வாழ்ந்து' வருகின்றன.

தாயாண் மரபு ஒடுக்கப்பட்டு தந்தையாதிக்கம் மேல் நிலையாக்கமாக நாடு முழுதும் ஒப்புக் கொள்ளப்பட்டது. கூர்ந்து நோக்கினால் இதற்கு ஒரு முக்கிய காரணம் புலப்படுகிறது.

ஆதிமரபில், மானுடம் பண்படையாத சில கூறுகள் தெரிய வருகின்றன. முக்கியமாக, நரமாமிசம் கொள்ளல், குருதிப்பலி ஆகிய வழக்கங்களைக் குறிப்பிடலாம்.

‘பேய் மகளிர்’ என்பவர்களைப் பற்றிய விவரங்களைச் சங்க இலக்கியங்களில் பார்க்கும்போது, நரமாமிசம் புசிக்கும் ஒரு கூட்டத்தார் சமுதாயத்தில் வாழ்ந்திருந்ததை ஊகிக்கத் தோன்றுகிறது.

இறந்து போன போர் வீரரின் புலாலை, போர்க் களத்தில் வந்து இந்தப் பேய் மகளிர் உண்ணுகிறார்கள். இந்தக் கூட்டத்தினரைப் பெண்களாகவே குறிப்பிடுவதும், இவர்கள் பிணங்களைத் தின்று கூத்தாடும் விவரங்களை விரிப்பதும், அச்சம், அருவருப்பு இரண்டையும் ஊட்டுவதாக இருக்கின்றன. பேய் மகளிர் பிணக்குவியலைச் சூழ்ந்து நிற்பர்... (புறநானூறு-359:1-8) என்று வருணிக்கப்படுகிறது.

போர்க்களத்தில் பிதுங்கிய கண்ணையுடைய கோட்டான்கள் குழறும் குரலாகிய தாள-இசைக்கு ஏற்ப, கொடிய கண்கள் உடைய பேய் மகள் ஆடுவாள் என்று பதிற்றுப் பத்து விவரிக்கிறது.