பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

71

தில், வரிவடிவம் பெற்று, இரண்டாவது திரிபிடகமாகிய சுத்தபிடகத்தில் இடம்பெற்றதென்பர்.

இந்தப் பாடல்களில் மிக நீண்ட பாடல், ஸுமேதா என்ற பெண் துறவிக்கு உரியது. மந்தவதி நாட்டில் பிறந்த ‘கிரௌஞ்ச’ என்ற அரசனின் மகள் ஸுமேதா. வாரணாவதி நாட்டு மன்னன், அநிகர்த்தன் இவளை மணக்க விரும்பினான். அவனே வந்து இவளிடம் வேண்டினான். எழுபத்தைந்து பாக்களுடைய இந்த வரலாற்றில் இவள் பிறப்பு, வளர்ப்பு, துறவு எல்லாம் வருணிக்கப்படுகிறது. இவள் கல்வி கற்றாள் மனம் புரிய வந்தவர்களை மறுத்தாள். பெற்றோர் எடுத்துக் கூறியும் கேட்கவில்லை. பிரும்மசரியம்-பேரின்பம் இரண்டுமே வாழ்க்கை என்று புத்தமதம் தழுவினாள்.

இஷிதாஸி என்ற துறவியின் வரலாற்றில், பெண்கள் மறுமணம் செய்து கொள்வதில் தடையில்லாமலிருந்த குறிப்பு தெரிகிறது.

உஜ்ஜயினியில் உயர் வணிக குலத்தில் பெற்றோர்க்கு ஒரே மகளாக உதித்த செல்வி இவள். இவளை, ஸாகேத நகரத்தில் வணிக குல வாலிபனுக்கு மணமுடித்தார்கள். மணம் முடிந்தபின் கணவன் வீடு சென்றாள் இஷிதாஸி. பாடல் பின்வருமாறு வருகிறது.

‘காலையும் மாலையும் கணவரையும் (பெற்றோர்) மாமன் மாமியரையும் நெற்றி நிலத்தில் தோய, முழங்கால் பூமியில் பதிய எனக்குச் சொல்லிக் கொடுத்தபடி தொழு தெழுவேன்.

கணவரின் சோதர-சோதரர்-அவ்வீட்டு உறவினர்- எவர் வந்தாலும் பணிவுடன் எழுந்து நின்று வணங்கினேன்.

சீவிச் சிங்காரித்துத் தாதியாக அவருக்குப் பணிவுடன் ஏவலுக்குக் காத்து நின்றேன். சோறு பொங்கி, பண்ட பாத்திரம் கழுவி-கூனிக் குழைந்து பணியாற்றினேன்.