பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

75


அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் இப்பாடல்கள் பாடப்பட்டன என்றும், தொகுக்கப்பட்ட காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டுக்கு முன்னதாகவே இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர் கருத்துரைத்திருக்கின்றனர்.

காலக் கணிப்பு முன் பின்னானாலும், சங்க காலத்தில், பெண்ணின் கைம்மை நிலை, பரிதாபத்துக்குரியதாகக் காட்டப்பட்டிருக்கிறது என்பதுதான் இங்கே முக்கியமாகிறது. சங்க இலக்கியப்பாடல்கள் அகநானூறு, புறநானூறு போன்ற தொகுப்புகள், வீரர் பெருமை, போர்க்கள வெற்றி ஆகியவற்றை முதன்மைப் படுத்துகின்றன. வீரரைச் சார்ந்த காதலியர், கற்பு நெறியில் ஒழுகும் தலைவியர் ஆகியவர் நிலைகளில் பெண்களின் வாழ் நிலையைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

சுடுகாட்டுக்கு வந்த மனைவியை, மங்கலப் பெண்களுடன் வீடு திரும்பிச் செல்லும்படி பணிக்கும் ருக் வேதப் பாடலில், அதற்கு முந்தைய எரிக்கும் வழக்கத்தின் மெல்லிய இழைச் சான்று தெரியவருகிறது. அது, மாற்றப்படும் கூறு அழிக்கப்பட்டு, பெண்கள் கணவனுடன் எரிக்கப்பட்டனர். சட்டங்களும், கல்வி, புதிய நாகரிகங்கள் எதுவும் இந்த வழக்கத்தை அடியோடு ஒழித்து விடவில்லை. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், ‘ரூப்கன்வார்’கள் பலர் எரிக்கப் படுகிறார்கள்.

சங்க இலக்கியங்கள், பெண்ணை உரிமையுள்ளவளாகக் காட்டுவதாகவே எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. பெண்ணை வெறுக்கக்கூடிய கருத்தும் துறவு நெறியும், புலாலுண்ணாமை போன்ற ஒழுக்கங்களும் முதன்மைப் படுத்தப்பட்ட, சமண பெளத்த சமயச் செல்வாக்கு வலிமை பெற்றிராத தமிழ்ச் சமுதாயத்தை அந்த இலக்கியங்களில் காணமுடிகிறது. ஆரிய சமுதாயத்தின் வருணப் பாகுபாடுகள் கூட ஆழ்ந்து பிரதிபலிக்காத இச் சமுதாயத்தில் பெண்கள் சமூக விழாக்களில் பங்குபெற்றுச் சுதந்தரமான