பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

77


ஆனால் அவள் செவி மடுக்கவில்லை. அதற்கு அவள் கூறிய காரணம் குறிப்பிடத் தகுந்ததாகும்.

‘என்னைத் தீப்புகுதல் நன்று என்று சொல்லாமல் தடுக்கும் சான்றோரே...’ என்று விளிக்கையில், ‘பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே’ என்று குறிப்பிடுகிறாள்.

‘நெய்யும் அரிய பண்டங்களும் விலக்கி, வெறும் நீர்ச் சோற்றில் புளிசேர்த்துச் சமைக்கப்பட்ட வேளைக் கீரையைச் சேர்த்து ஒரு நேரம் உண்டு, பாயில்லாத பருக்கைக்கல் படுக்கையில் படுக்கும் கைம்மையின் கொடுமைக்கு, இந்த ஈமப்படுக்கை மேலானது’ என்று உரைக்கிறாள். இந்தப் பாடலை அடுத்து, அவள் காட்டிலுள்ள காளிகோயிலின் முன் தீ வளர்த்து எரிபுகுந்ததை, மதுரைப் பேராலவாயர் என்ற புலவர் 247 ஆம் பாடலில் சித்திரிக்கிறார். இதே கைம்மை நிலையை, இரங்கத்தக்கதாக, ஒக்கூர் மாசாத்தனார் (248) தும்பைச் சொகினனார் (249) தாயங்கண்ணியார் (250) ஆகியோர் விவரிக்கிறார்கள். ஆவூர் மூலங்கிழார் (261) பாடலில், ‘கொய்ம்மழித்தலையொடு கைம் மையுறக் கலங்கிய’ என்று வள்ளலான் நண்பன் காரியாதி என்பவர் இறந்ததும், மனைவி, மழித்த தலையுடன் காட்சியளித்ததையும் குறிப்பிடுவார்.

எனவே, இச்சான்றுகள், தாயநாயகச் சமுதாயமாக தமிழ்ச் சங்ககால சமுதாயத்தைக் குறிப்பிடவில்லை என்பதே உண்மை. பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்குதற்குரிய நெறிகளாக, ஒரு பக்கக் கற்பு நெறியும், கைம்மை நெறியுமே, தீவிரமாக்கப்பட்ட நிலையைக் காணமுடிகிறது.