பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. நாயகரைப் பாடிப் பரவிய நாயகியர்


நூற்றாண்டுகளுக்குப் பெண் தனக்குத் தூலமாகவும் சூக்குமமாகவும் விதிக்கப்பட்ட தளைகளைத் தகர்த்தெழும்புவது சாத்தியமல்லாத முயற்சியாகவே தீர்ந்து விட்டது.

அறிவுமலர்ச்சியும் குடும்பக் கடமையும் இவளுக்கு ஒன்றாக இசையாத வாழ்க்கையே விதிக்கப்பட்டு விட்டது. இறுகப் போடப்பட்ட முடிச்சை அறுத்து விடுதலை பெறுவதைவிட, முடிச்சை அதன் போக்கில் தளரச் செய்து அவிழ்த்து விடுதலைக் காற்றை நுகரமுற்படுவது ஓரளவுக்கு இயல்போடிணைந்த செயலாகிறது.

பெண், மாண்ட கணவனுடன் சிதையில் எரிக்கப்பட்டாள்; முண்டிதம் செய்யப்பட்டுக் கட்டாயத் துறவில் ஒடுக்கப் பட்டாள்.

இல்லையேல் அவள் பொது மகளாகச் சீரழிக்கப் பட்டாள். இந்த இரண்டாம் நிலையில் அவளுக்கு அறிவுக் கண் சிறிது திறக்கப்பட்டதால் ஓர் ஆசுவாசம் கிடைத்தது. தன் துயரங்களை வெளியிட்டுக் கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்பட்டன.

ஆனால் முதல் நிலைக் குடும்பக் கூடும்-இரண்டாம் நிலை பொது மகள் அறிவு பெறும் வாய்ப்பும் ஒரு நாளும் இசைந்து விடாதபடி சமூகம் விழிப்புடன் இருந்தது.

அவள் கற்பரசி. கணவரைச் சார்ந்துதான் மேன்மை பெறலாம். உடல் சார்ந்த போக உணர்வுகளை அவள் வெளிப்படுத்தும் போது அது கட்டிய கணவரைச் சார்ந்து தான் இருக்க வேண்டும். கடவுளையே நாயகனாக அவள் வரித்தாலும் அது அவளுக்கு இழுக்குத்தான். தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தொழுது, தெய்வமாக்குபவள் அவள்.