பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

இந்திய சமுதாய... / நாயகரைப் பாடிப் பரவிய நாயகியர்


முதலிலேயே, சிவனடியாருக்குக் கணவன் வாக்கில்லாமல் உணவு படைத்ததன் தண்டனை போல் அவன் கடிந்து கொண்டான் என்று ‘கதை’ வரவில்லை. ஆனால் ‘குற்றமோ’ என்று அவள் உண்மை மறைத்து, தெய்வத்தின் அருள் வேண்டினாள் என்று அற்புதம் நுழைக்கப் பெறுகிறது. சிவனை வழிபடு கடவுளாகக் கொண்டு, அவள் குடும்ப வாழ்வை விட்டுச் சென்றாள் என்றால், ‘கற்புடைய பெண்ணுக்கு அது இழுக்காகிறது.’ மேலும் இவளை முன்னோடியாகக் கொண்டு, கணவனிடம் துன்புறும் பெண்கள் சிவனே தஞ்சம் என்று புறப்பட்டால், சிவபக்தியும் கூடப் பழுது பட்டதாகி விடுமே?

எனவே, அற்புதம் நிகழ்த்தப்படுகிறது.

கணவன், “ஓ, இவள் சாதாரணப் பெண் அல்ல, இவள் தேவதையோ, யஷிணியோ, யரோ!” என்று அஞ்சினானாம். அது மட்டுமன்று. அப்படியே வீட்டை விட்டு நழுவி, கடலில் கலம் ஏறிச்சென்று வேறு ஒரு கரையில் இறங்கி, பாண்டிநாட்டுத் தலைநகர் மதுரைக்குச் சென்று புதிய வாணிபம் தொடங்கினான் என்று வரலாறு கூறுகிறது.

கணவன் அகன்றபின், ஒன்றும் புரியாத புனிதவதி, வீட்டினுள் ஒடுங்கிச் சிவபெருமானைத் தொழுதவளாய் நாட்களைக் கழித்தாள். அப்போது, மதுரை சென்று வந்த வணிகர் கூட்டத்தின் வாயிலாகச் செய்திகள் இவளை எட்டின.

பரமதத்தன் வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அக்குழந்தைக்கு அவள் நினைவாகப் ‘புனிதவதி’ என்று பெயரிட்டிருக்கிறான்.

கணவன் வெறுத்தாலும், மனைவி அவன் நிழலை விட்டு ஒதுங்கலாமா? எனவே அவளைக் கணவரிடம் அழைத்துச் சென்றனர்.