பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களைப் பயமில்லாமல் சொல்ல வைக்கிறது. ஏனெனில் தைத்திரிய உபநிஷதம் பின்வருமாறு கூறுகிறது:
“பிரம்மத்தின் ஆனந்தத்தை அறிந்தவன் எக்காலத்தும் பயப்பட மாட்டான்.” இதை நம்புகிறவர் அல்லவா ராதாகிருஷ்ணன்?
இக்கூற்றுக்கு இந்திய தத்துவங்களில் ஆதாரம் ஏதாவது ராதாகிருஷ்ணன் தருகிறாரா? இல்லையே!
ராதாகிருஷ்ணன் சிலாகித்துப் பேசும் “உள்ளுணர்வு” பற்றி குமரில்லபட்டர் எள்ளி நகையாடுகிறார். இவர் ஆதிசங்கரரின் குருவென்று கருதப்படுகிறார். இவரது காலம் 6-ம் நூற்றாண்டு. ராதாகிருஷ்ணனது ‘ஆன்மீகம்’, ‘கடவுள்’, ‘உள்ளுணர்வு’ என்ற கருத்துக்கள் இந்தியத் தத்துவங்களில் ஒரு சிறுபான்மையினரின் கொள்கைகளே. சிந்தனை உலகிலேயே மிகவும் சிறப்பான தருக்க வாதத்தில் ‘கடவுள் இன்மை’க் கொள்கையை இந்திய தத்துவங்களில் பெரும்பாலானவை பேசுகின்றன.
இவ்வாறு நான் சொல்வது திகைப்பூட்டுவதாக இருக்கலாம். ஆனால் நான் சொல்வதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. “கடவுள் இன்மை”க் கொள்கையைத் தான் தற்காலத்தில் 'நாத்திகம்' என்றழைக்கிறோம். இக்கொள்கை இந்தியத் தத்துவ வரலாற்றில் மிகவும் பழமையானது. நடுக்காலத்தில்கூட இக்கொள்கைக்காகப் போராடிய போராளிகள் இருந்தார்கள்.
வேதங்களை நம்பாமல், அவற்றை மறுத்துப் பேசியவர்களைப் பற்றி அந்நூல்களிலேயே சான்றுகள் உள்ளன. இவர்களை நாத்திகர் என வேதங்களை நம்பியவர்கள் அழைத்தார்கள். இவர்களை வேதப்பாடல்களை இயற்றிய கவிகள் ‘விதண்டாவாதிகள்” என அழைத்தார்கள். ராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்கள் இவர்களைப் பற்றியப் பேசுகின்றன. அவை சாருவாகர், லோகாயதர், பூதவாதிகள் என்று இவர்களைக் குறிப்பிடும். இவர்கள் முரணற்ற நாத்திகவாதக் கொள்கையைக் கடைப்பிடித்த