தலைக்குனிவு 133
பேசிக்கொண்டே போனவன் ‘என்னால்’ என்ற வார்த்தையை விழுங்கிவிட்டு, ‘பிரிந்திருக்க முடியாது’ என்பதை வார்த்தையாகச் சொல்லாமல் செயலாகக் காண்பித்தான்.
ரமா தனது இரண்டு தோள்களிலும் விழுந்த மன்மதக் கரங்களை தன் கையாலேயே தூக்கி வீசியடித்தாள். அவனையே வெறித்துப் பார்த்தாள். நடந்ததை நம்பமுடியாதவள் போல் வாய் திறந்து, வலதுகரம் விரல் பிரிந்து. முகத்தில் குவிய ஸ்தம்பித்து நின்றாள். அரை நிமிட உஷ்ணமான மௌனத்திற்குப் பிறகு "இட் இஸ் திஸ் நான்சென்ஸ் ஸார்... நீங்க உள்ளன்போட பழகுறீங்கன்னு நினைச்சேன்! கடைசில உடலன்போட பழகியிருக்..."
"ஐ ஆம் ஸாரி ரமா..."
"சேய் மிஸஸ் பாஸ்கரன்..."
"ஐ அம் ஸாரி... மிஸஸ் பாஸ்கரன்... இந்தக் காலத்துல செக்ஸ் மூலவிக்ரஹம் இல்ல. வெறும் உற்சவமூர்த்திதான். நீங்க நாகரீகமான பெண் என்கிறதுனாலே, நீங்ககூட ஒரு சமயம் செக்ஸ் இஸ் லைக் பொட்டட்டோன்னு சொன்னதால... ஐ ஆம் ஸாரி"
"ஓஹோ! ஒங்க கருத்துப்படி செக்ஸ் ஒரு உடல் தேவைன்னு சொல்ற பெண்ணுல்லாம் உடனே வாரவள், ஆணுக்குச் சரி நிகர் சமமாய் பழகுற பெண்களெல்லாம் ஒருவன் கூப்பிடுறதுக்காக காத்திருக்கிறவள். என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க ஸார் இப்பவும் சொல்றேன், செக்ஸ் ஒரு உடல்தேவைதான். அதாவது கணவன் மனைவிக்கு, ஒங்க அம்மாவுக்கும் அப்படித்தான். எனக்கும் அப்படித்தான். பேமிலிமேனான நீங்க இப்படி நடக்கக் கூடாது ஸார்! கணவன் மனைவி என்கிற வரம்பும், கற்பு என்கிற நெறியும் இருக்குறதுக்குக் காரணம், ஒருவனும் ஒருத்தியும் ஒருவருக்கு இன்னொருவர் தன்னை இழந்து பிறிதொருவரைப் பெறுவது என்கிறதுக்காகத்தான்... நீங்க சொல்லலாம். உணர்ச்சிவசத்துல தப்பு நடக்கிறது சகஜமுன்னு... அது கணவனுக்கு துரோகமாகாதுன்னுகூட வாதாடலாம்.