பக்கம்:இன்னொரு உரிமை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142  சு. சமுத்திரம்


"ஏதோ நம்ம நல்ல காலம்... தலைக்கு வந்தது தலைப்பாகையோட போன மாதிரி கையைப் பிடிச்சதோட விட்டுட்டானே! நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது நடந்திருந்தால்... எப்படியோ அப்பாவோட பூஜா பலன், ஒன்னைக் காப்பாத்திட்டு, ஆண்டவன் அவனுக்குக் கூலி கொடுப்பான், இந்தத் தப்புல தப்பிச்சாலும் அடுத்த தப்புல மாட்டிக்கு, வான்!"

"ஒரு தப்புச் செய்தால் அந்தத் தப்புக்குன்னு தண்டனை கிடைக்கணும். அப்போதான் அந்தத் தப்பே அப்புறம் நடக்காது. இன்னும் விவரமாய் விளக்கம் கேட்டால் தப்புச் செய்தவன் நல்லது செய்யும்போது- அந்த நல்லதே தப்பாகி, தண்டனை கிடைக்குமுன்னு சொல்வீங்க. அதனால கெட்டது ரெட்டிப்பாகும். நல்லது ஓடிப்போகுமுன்னு நானும் பதில் சொல்ல வேண்டியது வரும்!"

"சரி, பல்லை விளக்கு. நேத்து ராத்திரியே சாப்பிடலை."

"எப்படிம்மா சாப்பிட முடியும்? லைப்ரரியில் ஒரு புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு நின்ன என்னை, அந்தப் புத்தகத்தைப் பார்க்கிற சாக்கில், கழுத்தில் முகம் போட்டு அதன்பிறகு ஓடப்போன என்னை கையைப் பிடிச்சு... அந்தப் பயலை அடக்கவே முடியாதா?"

இசக்கியா பிள்ளையின் காதுகளில் மேற்கொண்டு எந்த வார்த்தையும் விழவில்லை. மாறாக மனைவியின் அழுகைச் சத்தம் கேட்டது. அவர் துள்ளிக் குதித்து எழப்போனார். அதற்குள் அவள் சத்தமடங்கி, தைரியப்பட்டதுபோல் தோன்றியது. மகளும் மறுவார்த்தை பேசாததில் இருந்து, விவகாரம் தீர்ந்துவிட்டதாய் நினைத்து அருட்பா அகவலைப் படிக்கத் தொடங்கினார். ஓதுவார் போலவே தாள லயத்தோடு ஓசை உயிரோடு ஓதிக்கொண்டிருந்தார்.

"மதம்புரை மோகமும் மற்றவும் ஆங்காங்கு

அதம்பெற அடக்கு அருட்பெரும் ஜோதி."
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/151&oldid=1369273" இலிருந்து மீள்விக்கப்பட்டது