பக்கம்:இன்னொரு உரிமை.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிசமான பத்தினி167


சினிமா பார்த்து மூன்று நாட்களாகிவிட்டாலும், சீனியம்மைக்கு அந்த சினிமா படமே கண்ணில் திரைபோட்டது. அது கண்ணில் திரை போட்டது என்றால் அந்தப் பெண்களின் பேச்சும், பேச்சுக்கேற்ற முன் கொசுவமும், கொசுவத்திற்கேற்ற புடவையும் கருத்திற்குத் திரை போட்டன.

சீனியம்மை தன் உள்ளங் கைகளைப் பார்த்தாள். அப்போது சினிமாவில் கதாநாயகன் நாயகியின் கையைப் பிடித்து, ‘இந்த மென்மையான கையைப் பிடிக்க என்ன தவம் செய்தேனோ’ என்ற வார்த்தை நினைவுக்கு வந்தது. அது வரவர, அவள் தன் உள்ளங்கையை நிமிர்த்திப் பார்த்தாள். வலதுகையின் ஆள்காட்டி விரலின் மத்தியில் கறுப்பு நிறத்தில் ஒரு காய்ப்பு. பெருவிரல் ‘படத்தில்’ மண்வெட்டிக் கணைபட்ட தடயம். உள்ளங்கையின் சரிந்த உட்பகுதியில், திட்டுத் திட்டாகக் காய்ப்புக்கள். இந்த ஆள்காட்டி விரலால் வாய்க்கால் மண்ணை எடுத்து, பல் தேய்த்ததால், அந்தக் காய்ப்பில் சின்னச் சின்னப் புள்ளிகள். அந்தப் புள்ளிகளில், கடைவாய்ப் பல்முனை பட்டு லேசான கீறல்கள். அந்தக் காய்ப்பும், புள்ளியும் கீறலும் சீனியம்மைக்கு அவமானச் சின்னங்களாகத் தோன்றின. சீ! சினிமாவுல வாரவளோட கையி எப்படி இருக்கு! இலவம் பஞ்சு மாதுரி... சினிமாக்காரி எதுக்கு? இன்னா பீடி சுத்தறவளுவ கையிசுட எவ்வளவு ‘மெதுவா’ இருக்கு. நாளக்கி நம்மள கட்டறவனே இந்தகைய சினிமாவுல வாரவன் பிடிக்கது மாதிரி ஒருவேளை பிடிச்சால்...? ஒருவேளை என்ன? நிச்சயம் பிடிப்பான். அப்போ இந்த காய்ப்பப் பார்த்தான்னால்...? சீ, மண்வெட்டியப் பிடிச்சுப் பிடிச்சு என் கையி மண்வெட்டி மாதிரியே ஆயிட்டு... முன் கொசுவம் வச்சிக் கட்ட முடியல. உள்ளங்கைய சினிமாவுல சொன்னதுமாதிரி ரோஜாப்பூ மாதிரி ஆக்கணும்.’

சீனியம்மைக்கு, திடீரென்று ஒரு சபலம் ஏற்பட்டது. முப்பது வினாடிகளுக்குள் அந்தச் சபலம் எண்ணமாகி பிறகு அதுவே ஒரு வைராக்கியமாக வைரப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/176&oldid=1368903" இலிருந்து மீள்விக்கப்பட்டது