பெங்களூர் தெரஸா 75
அவளை கண்கள் கெஞ்சும்படி பார்த்தான், தெரேஸாவின் முகத்தில் பழைய மாதிரியான ஒரு புன்னகை. அரும்பாகி மொட்டாகி மலரான குறுஞ் சிரிப்பு.
திடீரென்று தலைமாட்டில் இருந்த தன் மகனை நகரும் படிச் சொல்கிறாள். அவன் நகர்ந்த இடத்தில் லிங்கையாவை அமரும்படி சைகை செய்கிறாள். அவனைப் பார்த்து லேசாய்க் கையை ஆட்டிச் சிரிக்கிறாள். அவனை தன் பிள்ளைகளோடு சேர்த்துச் சேர்த்துப் பார்க்கிறாள். தயங்கி நிற்கும் லிங்கையாவை நோக்கி, தாய்போலக் கையை நீட்டுகிறாள்.
லிங்கையா புரிந்துகொள்கிறான்.
அவளின் தலைப்பக்கம் போகாமல், கால் பக்கம் போகிறான். அவளின் இடது பாத விரல்களுடன், தனது வலதுகை விரல்களைச் சேர்த்துக்கொள்கிறான். 'நான் ஒனக்கு பிள்ளையோ... இல்லியோ... நீதான் எனக்கு அம்மா! நீயே எனக்கு அம்மா!' என்று விம்முகிறான். புன்னகை மாறாத தெரேஸாவிற்குக் கண்ணிரால் பாத பூஜை செய்கிறான்.