பக்கம்:இலக்கண வரலாறு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

ஆதலால் தொல்காப்பியர் காலம் கி. மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதேயன்றிப் பிற்பட்டதாகாது. இக்கருத்துகளைப் பேரா. க. வெள்ளைவாரணரும் (தமிழிலக்கிய வரலாறு—தொல்காப்பியம், பக். 87-96), பேரா. சி. இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12-14) விரித்துரைக்கின்றனர்.

சிலப்பதிகாரத்தால் இலங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி. பி. 2-ஆம் நூற்றாண்டு என்பர். அச்சிலப்பதிகாரத்தில் ‘திருக்குறள்’ எடுத்தாளப்பட்டுள்ளது. ஆகலின் திருக்குறள் சிலப்பதிகார காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை. இளங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும் மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்டவரும், தண்டமிழ் ஆசான் சாத்தன் என இளங்கோவடிகளாரால் பாராட்டப்பட்டவருமாகிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் ‘பொய்யில் புலவன்’ என்றும், திருக்குறளைப் ‘பொருளுரை’ என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக்குறள் எனத் தெளியலாம்.

அத்திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப்பியம். ‘அறமுதலாகிய மும்முதற் பொருள்’ என்பது தொல்காப்பியம். ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என வருவதும் தொல்காப்பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப்பாலோ, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகலின் அத்திருக்குறளின் காலத்திற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/85&oldid=1471256" இலிருந்து மீள்விக்கப்பட்டது