பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 111


எதிர்த்த சேர சோழ வேந்தர்களோடு செய்த போரில் பூதப்பாண்டியன் இறந்து விட்டான். பிரியாது வாழ்ந்தரிடையே பிரிவு தோன்றிவிட்டது; தோன்றிய பிரிவு சிறிது நாள் கழித்துக் கூடலாம் சிறு பிரிவாகாது, மீண்டும் கூடலாகாப் பெரும் பிரிவாகி விட்டது. களத்தில் கணவன் இறந்து விட்டான் என்ற செய்தி கேட்டாள், பெருங்கோப் பெண்டு. கலங்கினாள்; கண்ணிர் விட்டுக் கதறி அழுதாள்; சிறிது நிலை தெளிந்து சிந்தித்தாள்.

“கணவன் இறந்தால், இறந்தான் கணவன் என்ற செய்தி அறிந்த அந்நிலையே, ‘அவன் சென்ற இடத்திற்கே யானும் செல்க!’ என அறிவிப்பார் போல், அவன் உயிரைப் பின்பற்றித் தம் உயிரையும் இழக்கும் இயல்புடையாரே, தலையாய கற்புடையராவர். அவ்வாறு உயிர்விடும் ஆகூழ் அற்றவிடத்து, அவன் உடல் எரிபுக்கு அழிந்ததேபோல், தம் உடலையும் எரியில் வீழ்த்தி அழித்துவிட்டுத் தம் உயிரை இழப்பவர் இடையாய கற்புடையராவார். அத்துணை மனவலி அற்றவர், அல்லது, கணவனை இழந்தும் உயிர்வாழ வேண்டிய இன்றியமையாக் கடமை உடையவர், இப்பிறவியில் இழந்த உடனுறை வாழ்வு, வரும் பிறவியில் வந்து வாய்க்குமாக என வேண்டி, வெள்ளரிக்காய் விதைகளைப் போன்று நீரில் மிதந்து கிடக்கும் பழஞ்சோற்றைப் பிழிந்தெடுத்து, நெய் கலவாம்ல் வெந்த வேளைக் கீரையைக் கலந்து கொண்டு, எள் துவையல் துணை செய்ய உண்டு,