இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இலக்கியங் கண்ட காவலர் 115
இந்த ஈமத் தீயால் துயர் உறுவேன் என்று உள்ளம் கவலற்க! தீப்பாய்ந்து உயிர் போக்கி உயர்வடையத் துணிந்த என்னை, இடைநின்று தடுத்தல் ஒழிக கூறி, விடைபெற்று விரைந்து தீப்புகுந்து விழுப்புகழ் பெற்றாள்.
கணவன் பாராட்டக் காதல் வாழ்வு வாழ்வதும், அக்கணவன் இறந்த பின்னரும் இருந்து உயிர்வாழ விரும்பாமையும், கற்புடைய மகளிர்க்குப் பொற்புறு அணிகலன்களாம் எனச் சொல்லால் உரையாது, செயலால் செய்து காட்டிய பெருங்கோப் பெண்டு, ‘அறம் கூறுதல் ஆன்றோர் கடன், அவ்வாறு தவறிய அவரைக் கடமை உணர்ந்தார், அவர் தவறு காட்டித் திருத்தி நல்வழிப்படுத்தலே நன்னெறி!’ என எடுத்துக் கூறும் அறிவுரைகள் அறிந்து மேற்கொள்ளத் தக்கனவாம்.