பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 11


தண்பெயல் என்ற இவற்றின் இயல்புகளுக்கு ஏற்ப, கார், கூதிர், முன்பணி, பின்பணி, இளவேனில், முதுவேனில் எனப் பிரிவுண்டு நிற்கும் காலத்தின் இயல்பைச் சுட்டிக் காட்டுகின்றது. அவ்வந் நிலங்களில் அவ்வக் காலங்களில் பூத்தும் காய்த்தும் பயன்தரும் மரம் செடி கொடிகள், நிலத்தில் ஊர்ந்தும் தவழ்ந்தும், ஒடியும், நடந்தும், நீரில் நீந்தியும் வானத்தில் பறந்தும் வாழும் பல்வேறு உயிர் வகைகளையும், அவ்வுயிர்களின் உணவு, உறையுள் ஒழுக்கம் ஆகியவற்றின் இயல்புகளையும் தெரிவிக்கின்றது. அவ்வுயிர்களுள் ஆறறிவு படைத்த மக்கள், மணந்து மக்களைப் பெற்று மனையறம் காக்கும் மாண்புடையதாய அகவொழுக்கத்தினை விளக்குகிறது; ஊராரும், உலகோரும் ஒன்று கூடி, அவ்வக வாழ்வு அமைதி நிறைந்த நல்வாழ்வு ஆதற்கு நற்றுணையாம் பொருளீட்டு முயற்சிகளையும், அம் முயற்சி இனிது நடைபெற நின்று துணை புரியும் அரசியற் சிறப்புக் களையும் அழகாகக் கூறுகின்றது. அவ்வரசியலை அறம் பிறழாது காக்கும் அரசர்கள் மேற்கொள்ளும் போர் நிகழ்ச்சிகளை உணர்த்தும் புற ஒழுக்கத்தினையும் இனிது எடுத்துக் கூறுகின்றது.

இவ்வாறு தமிழ் மொழிக்கும், அம் மொழி வழங்கும் தமிழ் நாட்டிற்கும், அந்நாட்டில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கும் இலக்கணம் வகுக்கும் தொல்காப்பியம் தோன்றி இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆயினும், அன்று கூறிய இலக்கணம், இன்றும் பொருந்துவதாகவே உளது. அவ்விலக்