பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 13



பல்வேறு காலங்களில் தோன்றித் தம் தம் காலத்தே தமிழ் ஒலிகளிலும், தமிழ்ச் சொற்களிலும், தமிழ் மக்களின் வாழ்க்கையிலும் தாம் கண்ட குறைகளையும் திருத்தங்களையும் நீக்கியும் கொண்டும் இலக்கணம் கூறிச் சென்றனர். இறுதியாக அவர் கூறிய இலக்கணங் களில் செப்பம் செய்து, சிறந்த தம் நூலை அளித்தார் தொல்காப்பியனார். காடுகளில் காட்டுமிராண்டி களாய் வாழ்ந்த தமிழ் மக்களிடையே தோன்றி, அவர் நாகரிக நெறியில் வளர வளர, அவரோடு தானும் வளம் பல பெற்று வளர்ந்து, இனியும் வளர வேண்டா இனிய நிலைபெற்ற தமிழ் மொழியின் இறவாப் பேரிலக்கியங்களுக்குத் தொல்காப்பியர் கூறும் இலக்கணங்களும் அவ்வாறு வந்தனவே.

இலக்கியம் என்பது, அவ்விலக்கியத்தைப் பெற்ற மக்கள் வாழ்க்கையோடு இரண்டற இணைந்து நிற்பதாம். சிறந்தது எனத் தாம் கண்ட நிகழ்ச்சிகளைச் சிறந்த சொற்களால் சிறப்பாக எடுத்துரைப்பதே இலக்கியமாம். ஊக்கமும், உரமும், உள்ள உயர்வும், உயர்ந்த ஒழுக்கமும் உடைய மக்கள் வாழும் நாடே சிறந்த நாடாகும். அந்நாட்டில், அன்னார் வாழும் காலத்தில் தோன்றிய அறிஞர்கள் நாட்டின் நன்னிலை கண்டு, நாட்டு மக்களின் நற்பண்பு கண்டு, அகம் மிக மகிழ்வர். எந்நாடும் அந்நாடு போலாயின, எந்நாட்டு மக்களும் அந்நாட்டு மக்களே போல்வராயின், உலகில் அமைதி நிலவும்; உலக மக்கள் உயர்நிலை பெறுவர் என அவர் கருதுவர். ஆகவே, பிற நாடுகளும், பிற நாட்டு மக்களும், இந்நாட்டையும், இந்நாட்டு