பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 15



காரணமாய பல இலக்கண நூல்கள், அதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருத்தல் வேண்டும். அவ்விலக்கண நூல்கள் தோன்றுவதற்குக் காரணமாய எண்ணற்ற இலக்கியப் பெரு நூல்கள், அவ்விலக்கண நூல்கள் தோன்றுவதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருக்கும். அவ்விலக்கியங்கள் தோன்றுவதற்குக் காரணமாய்த் தம் வாழ்வை வளம் நிறைந்ததாக ஆக்கிக் கொண்டிருப்பாராயின், அத் தமிழ் மக்களும், அம் மக்களின் இலக்கியங்களும் எத்துணைப் பழைமை உடையராதல் வேண்டும் என்பதை உய்த்துணர்வதல்லது, அந்தக் காலம் இந்தக் காலம் என வரைந்து காட்ட இயலுமோ? அக் காலத்தின் பழைமையினை அறிய மாட்டாமை யாலன்றோ புலவர் ஒருவர், அத்தமிழ்க் குடியின் பழைமையினை வரைந்து கூறாதே,

     “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
      முன்தோன்றி மூத்த குடி”

என்று கூறிச் சென்றுள்ளார்! நிற்க.

ஒரு மொழி தோன்றி வளர்ந்தவுடனே, அம்மொழி யில் இலக்கியங்கள் தோன்றிவிடும். இலக்கியம் காலந்தோறும் தோன்றிக் கொண்டே யிருக்கும். இலக்கிய ஆசிரியர்கள் எக்காலத்திலும் தோன்றுவர். இலக்கியம் தோன்றும் காலம் இது, அது தோன்றாக் காலம் இது என்ற வரையறை வகுப்பது இயலாது.