-19-
போன நிலையில், அதில் எழுதப்பெற்ற இலக்கியத்திற்கு எவ்வகை வாழ்வும் இல்லை. வெறும் பூதவுடலைப் பாடஞ் செய்து, காட்சிச் சாலையில் காத்து வைப்பதுபோல், இறந்து போன மொழியின் இலக்கியத்தை நூலகத்தில் வைத்துக் காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். எனவே, ஒரு மொழி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்றால், அதில் உள்ள இலக்கியமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்று பொருள். இனி, அம்மொழியின் வாழ்வில் மொழிக் கலப்பும் ஒலிக் கலப்பும் ஏற்பட்டு, அது சீரழிந்துக் கொண்டிருக்கின்றது என்றால், அதில் உள்ள இலக்கியங்களும் சீரழிந்து கொண்டிருக்கின்றன என்று பொருள். இனி, அந்த மொழி படிப்படியாக உருமாறித் தன் உயிர்ப்பை அறவே இழந்துவிடும் பொழுது, அதில் உள்ள இலக்கியங்களும் உயிர்ப்பை இழந்து தான் ஆகல் வேண்டும். எனவே, எவ்வாற்றானும் மொழியும் இலக்கியமும் ஒன்றின் வளர்ச்சியால் மற்றொன்று உயிர் வாழ்கின்றது என்பதையும், மொழிச் சிதைவு நேரும் பொழுதெல்லாம் இலக்கியச் சிதைவும் கூடவே தேர்கின்றது என்பதையும் நாம் ஒப்புக் கொண்டாகல் வேண்டும்.
11 : 2: தமிழ்மொழியில் கழகக்கால இலக்கியங்களைப் போல் மிகவும் சிறந்தனவும், கட்டுக் கோப்பு நிறைந்தனவும், என்றும் நின்று, உயிர்வாழும் தரமுடையனவும், இடைக் காலத்திலும், பிற்காலத்திலும் தோன்றாமைக்குக் கரணியம், படிப்படியாக ஏற்பட்ட மொழிக் குலைவே ஆகும். ஒரு மொழியின் இலக்கிய வாக்கத்தை அந்த மொழிதான் உருவாக்கவும் காத்துக் கொள்ளவும் முடியும் என்பதை அறிந்து கொள்க. பிறமொழி இலக்கியமானாலும், அதை நம் மொழியில் நம்மொழிமரபு கெடாமல் செய்தாலொழிய அது நம்இலக்கியம்
என்று கூறிக்கொள்ளல் முடியாது. [1]
- ↑ 8. எ-டு: கம்ப இராமாயணம், வில்லிபாரதம், இரட்சண்யயாத்திரிகம், நைடதம், மனோன்மணியம் முதலியவற்றை நோக்குக!