பக்கம்:இளந்தமிழா.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பு வழி அன்பரசு வீற்றிருக்கும் அருளாட்சி மேல் நிலையில்; அவ்வாட்சி ஓங்கிவிட்டால் அனைத்துலகும் இன்பமன்றே? அன்புசெய்தால் தேவநிலை; அதையழித்தால் விலங்காவோம்; ஆதிமுதல் தொடர்ந்துவரும் பூதகணத் திரையாவோம். ஆற்றல்மிகும் மானிடனே, அறிவாலும் மனத்தாலும் அற்புதமாம் கற்பனைகள் அவை செயலில் வெற்றிகண்டாய்: காற்றினிலே பறந்து சென்றாய், கலைகள் பல.தோற்றுவித்தாய்; கனவாய் நினைத்தவெலாம் கைகூடச் செய்துள்ளாய்: அண்டம் அளந்தறிவாய். அணுவையுமே பிளந்தறிவாய். அளவில்லாச் சாதனைகள் ஆனாலும் உன்னகத்துள் மண்டுமிருட் கொடுங்குகையை மடை மாற்றி ஒளியேற்ற வகையறியாக் கீழ்நிலையில் வாய்த்த வெற்றி யென்னபயன்? அறிவெதற்கு? மனம் எதற்கு? அனைத்தையுமே அழிப்பதற்கோ? ஆக்குதிறன் எல்லாமுன் அழிவுக்கே வழிசெயவோ? i00

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/102&oldid=1360708" இலிருந்து மீள்விக்கப்பட்டது