பக்கம்:இளந்தமிழா.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதைச்சொல்

உள்ளத்திலே பல வேளைகளில் எத்தனையோ உயர்ந்த எண்ணங்கள் தோன்றுகின்றன. மக்களுடைய இன்பத்திற்கும் மேம்பாட்டிற்கும் அவை உகந்தவை. எல்லோருடைய உள்ளத்தையும் கவருமாறு அவற்றையெல்லாம் அழகான சொற்களாலான சிறந்த கவிதைகளாக வெளியிட முடியுமானால் எத்தனை நன்மை பயக்கும்!

உயர்ந்த எண்ணங்கள் உள்ளத்திலே எழுகின்றன - எப்படி? உருவறியா ஓவியங்கள் போல: பண்ணின் எழில் வீச்சுப்போல - கற்பனை ஆற்றல் மிகுந்த இசைவாணன் ஒருவன் ஓர் இராகத்தை விரிவாக ஆலாபனம் செய்யும்போது அதன் விரிவிலும், வளைவு, நெளிவு குழைவுகளிலும் ஆங்காங்கே மின்னுகின்ற உணர்ச்சிகளைப் போல.

பைந்தருவின் நீழல் - பச்சை மரத்தின் அடியிலே நிழல். அந்த நிழலிலே ஒரு தண்மை இருக்கிறது. வெய்யிலில் வாடி வந்தவன் அது தருகின்ற இன்பத்தை உணருகிறான். ஆனால் அந்தத் தண்மை உருவில்லாது எங்கோ மறைந்து நிற்கிறது. அதுபோல.

எண்ணப் பெருங் குகையில் இருள் படிந்த மூலையிலே உயர்ந்த கருத்துகள் இப்படி உருவறியாது எழுகின்றன.

அஜந்தாக் குகை ஓவியங்கள் பல ஆண்டுகள் கண்ணிற்குப் புலப்படாது மறைந்திருந்தன. ஆனால் அவை இன்று உலகத்தையே கவருகின்றன. எண்ணங்கள் அவ்வாறு உருப்பெற்று வெளிப்பட்டுப் பலரையும் கவரவேண்டும்; அவற்றிற்கேற்ற கவிதைச் சொல் வேண்டும்.


47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/49&oldid=1460154" இலிருந்து மீள்விக்கப்பட்டது