பக்கம்:இளந்தமிழா.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடை

வானில் தனித்திலங்கும் வண்ணப் பிறைபோல்
வளரும் அழகுடைய மங்கை நல்லாளே
ஏனிந்தக் காதலென்மேல் என்று கேட்கிறாய்
ஏதும் விடையறியா தேங்குகின்றேன் நான்.

மாலை இளவெயிலில் சோலை தனிலே
வந்ததும் கண்டதும் காதல் கொண்டதும்
மேலும் அது வளரும் விந்தையினையும்
விளம்ப வகையுமுண்டோ மின்னற்கொடியே?

வீணை நரம்பினிற்கும் மெல்லிசைக்குமே
மேவும் தொடர்பதனை சொல்லலாகுமோ?
தேனை அகத்துள் வைத்தசெவ்வி மலர்க்கும்
செங்கதி ரோனுக்கும் காந்தம் என்னவோ?

சோர்விற் சுழலுகின்ற கண்கள் தமக்கும்
தூக்கம் அதற்கு மென்ன சொந்தம் சொல்லுவாய்?
ஆர்வமுடன் மகவின் கூவல் கேட்டதும்
அம்மம் சுரக்கும் வகை யாரறிவாரோ?

ஓடும் புனல் தனக்கும் ஓங்கும் ஓதைக்கும்
உற்ற பொருத்தமதை ஓதலாகுமோ?
நாடி உனை நினைந்தே வாடுகின்றேனே
நல்லமொழி எனக்குச் சொல்லிடு வாயே!

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/57&oldid=1535562" இலிருந்து மீள்விக்கப்பட்டது