பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடனே, வேடிக்கை பார்க்க அங்கு வந்திருந்தவர்கள், “ஆமரம் ஆமாம். அதுதான் சரி” என்று கூச்சலிட்டனர்.

பந்தயம் கட்டியவர்களுக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. வெட்கத்துடன் திரும்பி விட்டனர்.

இப்படி அவர் எவ்வளவோ வேலைகளை யுக்தியுடன் செய்திருக்கிறார். இதனால்தான் அவருக்கு விரைவிலே விடுதலை கிடைத்தது. அடிமையாக இல்லாமல், எங்கும் இஷ்டம் போல் சுற்றித் திரிய முடிந்தது. சுற்றித் திரிந்து, குட்டிக் கதைகளைக் கூறவும் முடிந்தது.

ஈசாப் மிகுந்த புத்திசாலி. அவர் பேச்சும், செய்கையுமே அதை நன்கு காட்டுகின்றன.

அவர் அடிமையாக இருந்த போது, ஒரு நாள் அவருடைய எஜமானர் வெளியூர் செல்லப் புறப்பட்டார். சாமான்களைத் தூக்கி வருவதற்காகத் தம்முடன் சில அடிமைகளையும் அழைத்துச் செல்வது அந்த எஜமானரின் வழக்கம்.

அன்று எடுத்துச் செல்ல வேண்டிய சாமான்களை ஈசாப் ஒரு முறை பார்த்தார். பிறகு, மற்ற அடிமைகளைப் பார்த்து, “எனக்கு அதிக கனமில்லாத சுமையைத் தர வேண்டும்” என்று கேட்டார்

ஈசாப்பிடம் மற்ற வேலைக்காரர்களுக்கு எப்போதுமே நல்ல மதிப்பு உண்டு. ஆகையால், “சரி, உனக்கு வேண்டிய சாமானை எடுத்துக் கொள்” என்றார்கள், அவர்கள்.

உடனே ஈசாப் அங்கிருந்த பெரிய கூடை ஒன்றை எடுத்துக் கொண்டார். அக்கூடை நிறைய ரொட்டிகள் இருந்தன, வழியில் சாப்பிடுவதற்காக. ஈசாப் பெரிய கூடையைத் தூக்கிக் கொண்டதும்: மற்ற அடிமைகள் சிரித்தார்கள்.

118